![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Annamalai Report: வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்; நடவடிக்கை தேவை -அண்ணாமலை
வருமான வரித்துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்ட திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
![Annamalai Report: வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்; நடவடிக்கை தேவை -அண்ணாமலை BJP State President Annamalai said should take strict action against the DMK members incometax officers threaten Annamalai Report: வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்; நடவடிக்கை தேவை -அண்ணாமலை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/26/839ff83127ac5e6c0e896642018f71d51685097717000333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வருமான வரித்துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்ட திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
”இன்று கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொள்வதாக இருந்தது.
இதை சற்றும் எதிர்பாராத அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அஷோக்கின் ஆதரவாளர்கள், வருமான வரித்துறையினரை தங்கள் பணியைச் செய்யவிடாமல் முற்றுகையிட்டு அச்சுறுத்தியதோடு அவர்களது வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சூழலில், வருமான வரித்துறை அதிகாரிகளின் மீது திமுகவினர் நடத்திய வன்முறை தாக்குதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூழலைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது.
வருமான வரித்துறையினருக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டிய தமிழகக் காவல்துறை, தங்களுக்கு வருமான வரித்துறையினரின் சோதனை குறித்த தகவல் வராததால் பாதுகாப்பு வழங்கமுடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். வருமான வரித்துறையினர் வந்தது திமுகவினருக்கு மட்டும் தெரிந்து உடனடியாக சோதனை நடைபெறும் இடத்தில் கூட்டம் சேர்ந்த போது, உடனடியாக காவல்துறையினர் விரைந்து செல்லாதது ஏன்? சட்டத்திற்குப் புறம்பான பரிவர்த்தனை சம்பந்தமான ஆவணங்கள், சொத்து விவரங்கள், பணம் மற்றும் நகை ஆகியவற்றைப் பதுக்க வருமான வரித்துறையினர் சோதனை தடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.
வருமான வரித்துறையினர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக நடந்து கொண்ட திமுகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் வருமான வரித்துறையினருக்கு உரியப் பாதுகாப்பு வழங்கத் தவறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”எனது சகோதரர் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது. எனது வீட்டில் சோதனை நடைபெறவில்லை. நடைபெற்றாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன். விரும்பத் தகாத சம்பவம் குறித்து அமைப்புச் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது இது போன்ற சோதனைகள் நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற்றது, தற்போதும் நடைபெறுகிறது.
வருமான வரி செலுத்தக்கூடியவர்கள் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. அவர்கள் கேட்கின்ற ஆவணங்களை வழங்க தயாராக உள்ளோம். வரி ஏய்ப்பு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் பெயரில் எந்த சொத்தும் வாங்கவில்லை. இருக்கின்ற சொத்து போதுமானது. சோதனைகளை எதிர்கொள்வது புதிதல்ல. எத்தனை நாட்கள் நடைபெற்றாலும் முழு ஒத்துழைப்பு வழங்குவோம்” இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)