அண்ணா பல்கலை பேராசிரியர்கள் நள்ளிரவில் போராட்டம்: 328 ஆசிரியர்களின் எதிர்காலம் என்ன?
"சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உறுப்புக்கல்லூரி தொகுப்பூதிய பேராசிரியர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்."

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின், 16 உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் கடந்த 10 முதல் 17 ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையில் உதவி பேராசிரியர்களாக பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இரவு நேரத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேராசிரியர்களின் திடீர் போராட்டத்திற்கு காரணம் என்ன?
தமிழ்நாடு முழுவதும் கிராமப்புற மாணவர்களின் பொறியியல் கல்வி கனவை நினைவாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் கல்வித் தரத்தை நிலைநிறுத்தி வந்த 328 தொகுப்பூதிய உதவி பேராசிரியர்கள் (Teaching Fellows) பணி நீட்டிப்பு ஆணை வழங்காமல் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைத்திருப்பதாக பேராசிரியர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
இதுகுறித்து பேராசிரியர்கள் கூறுகையில், 2008-ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்ட இக்கல்லூரிகளில், கடந்த 10 முதல் 16 ஆண்டுகளாக 320க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய உதவி பேராசிரியர்கள் (Teaching Fellows) குறைந்த ஊதியத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி கல்வித் தரத்தை நிலைநிறுத்தி வந்த, இவர்கள் ஜனவரி மாதம் 2026 முதல் பணியில் சேர விடப்படாமல் ஊதியமின்றி காத்திருப்பில் வைத்து, இவர்களை பணி நீக்கம் செய்ததன் விளைவாக இந்த ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல, கிராமப்புற மாணவர்களின் கல்வி தரத்தையும் கடுமையாக பாதிக்கும் அபாயத்தை அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாகம் உருவாக்கியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தற்காலிக உதவி பேராசிரியர்கள் துணை முதலமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை பலமுறை சந்தித்து கோரிக்கை வைத்தும் தெளிவான தீர்வு எடுக்கப்படவில்லை. மேலும் கோரிக்கை தொடர்பாக பிப்ரவரி மாதத்தில் கடந்த 10 நாட்களாக கல்லூரி வளாகத்தினுள் உள்ளிருப்பு போராட்டமும் பின்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காத்திருப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.
சம வேலைக்கு சம ஊதியம்
மேலும் இதுகுறித்து பேராசிரியர்கள் கூறுகையில், சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் கோரி கடந்த 2019 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 06.02.2026 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் “தற்காலிக ஆசிரியர்களுக்கும் வாழ்க்கை உள்ளது; அவர்களை வெற்று காகிதம் போல பயன்படுத்தி தூக்கி எறியாதீர்கள்” என்று கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும் இதுகுறித்து பேராசிரியர்கள் கூறுகையில், அனைத்து துறைகளிலும், கட்டாயம் குறைந்தது 09 ஆசிரியர்கள் இருந்து பணியாற்ற வேண்டிய இடத்தில் தற்சமயம் 05 அல்லது 06 ஆசிரியர்களை மட்டுமே கொண்டு வகுப்புகள் நடத்த வாய் வழியாக உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது AICTE விதிமுறைகளுக்கு முரண்பாடாக அமையப் பெற்றுள்ளது. இந்தர நடைமுறைகள் Teaching Fellows பணிநீக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகம் எழுகிறது.
பாதிப்படையும் மாணவர்கள் ?
அனைத்து கல்லூரிகளிலும், கடந்த 2026 ஜனவரி 05 ஆம் தேதி அன்று வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில் பல பாடங்களுக்கு மற்றும் பல பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லாமல் , வகுப்புகள் அனைத்தும் காலியாகவே உள்ளது. மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதற்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டதன் விளைவாக பருவ தேர்வுக்கான பாடத்திட்டத்தினை முழுமையாக நடத்தி முடிக்க இயலாமல் உள்ளது. இச்சுழ்நிலையில் மாணவர்களுக்கு கல்வி கற்றலுக்கான நெருக்கடியும் அவர்களுக்கான பாதிப்பும், பல்கலைக்கழக நிர்வாகத்தின் மூலம் தற்சமயம் பொறுப்பு வகிக்கும் பதிவாளர் அவர்களின் வழியாகவே செயற்கையாகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் கிராமப்புற மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. 328 ஆசிரியர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்யப்பட்டதன் விளைவாக அவர்களின் குடும்பங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டதுடன், அவர்களின் சமூக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
கோரிக்கைகள் என்னென்ன ?
328 தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு (Teaching Fellows) மீண்டும் உடனடி நியமனம் பணி நீட்டிப்பு ஆணை வழங்குதல். ஜனவரி மாதத்திற்கான ஊதிய இழப்பை வழங்குதல்நீதிமன்ற உத்தரவை உடனடியாக பின்பற்றிய ஊதிய உயர்வு மற்றும் அனுபவ சான்றிதழ் வழங்கிட வேண்டும். அடிப்படை தேவைகளான ESI, EPF, மருத்துவ காப்பீடு போன்றவற்றை நடைமுறைப்படுத்துதல். பணியின் போது உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்திற்கு பணிக்கொடை மற்றும் ஈமச்சடங்கு நிதி வழங்கிட வேண்டுதல். கல்வித் தரத்தை பாதிக்கும் நடைமுறைகளை நிறுத்தல்UGC விதிமுறைகளின்படி ஊதிய திருத்தம் செய்து சம வேலைக்கு சம ஊதியம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.























