Anbumani Pmk: மேகதாது அணை கட்டக்கூடாது.! பிலிகுண்டுலு முதல் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம்- அன்புமணி அதிரடி
Anbumani Pmk : காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மேகதாது அணை திட்டத்தை தடுக்க வலியுறுத்தி பிலிகுண்டுலு முதல் பூம்புகார் வரை ஜூலை 01 முதல் 04 ஆம் தேதி வரை அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மேகதாது அணை- தமிழகம் எதிர்ப்பு
தமிழகத்தில் விவசாயம் மற்றும் குடிநீருக்கு முக்கிய நீர்வள ஆதாரமாக இருப்பது காவிரி நீர். ஆனால் தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் குறுக்கே அணைகட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் நீர்வளம் முற்றிலும் பாதிக்கப்படும் நிலையானது உருவாகும். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தொடர்ந்து சட்ட போராட்டங்கள் நடத்தி வருகிறுது. இதே போல பல்வேறு அரசியல் கட்சிகளும் மேகதாது அணைக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தியது. இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மேகதாது அணை திட்டத்தை தடுக்க வலியுறுத்தி பிலிகுண்டுலு முதல் பூம்புகார் வரை இன்று முதல் ஜூலை 04 ஆம் தேதி வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களின் பாசன ஆதாரமாகவும், 25மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி ஆறு திகழ்கிறது. அதன் குறுக்கே, 70 டி.எம்.சி கொள்ளளவுள்ள மேகதாது அணையை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. அந்த அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்கு நீர் வருவது தடுக்கப்பட்டு, காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதைத் தடுக்க காவிரியில் மேகதாது அணை கட்டும் சதித் திட்டம் முறியடிக்கப்பட வேண்டும்.
மேகதாது அணை என்றால் என்ன?
- குடகு மலையில் உருவாகும் காவிரி கர்நாடகத்தில் 320 கி.மீ, தமிழகத்தில் 416 கி.மீ பாய்கிறது.
- தமிழகத்திற்குள் நுழைவதற்கு 4 கி.மீ முன்பாக மேகதாது என்ற இடத்தில், காவிரியும், அதன் துணை ஆறான அக்ராவதி ஆறும் கலக்கும் இடத்தில் 325 அடி (99 மீட்டர்) உயரத்தில், 2411 அடி (735 மீட்டர்) அகலத்தில் கான்க்ரீட் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்திருக்கிறது.இந்த இடம் பெங்களூரில் இருந்து 90 கி.மீ தொலைவில் உள்ளது.
- கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாரின் சொந்த தொகுதியான கனகபுராவில் இது அமையும். அணையின் கொள்ளளவு 67.16 டி.எம்.சி என திட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தாலும் 70 டி.எம்.சிக்கும் கூடுதலாக இருக்கும்.
மேகதாது அணையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
- கர்நாடகத்தில் காவிரி & துணை ஆறுகளில் கட்டப்பட்டுள்ள 4 அணைகளின் கொள்ளளவு 114.57 டி.எம்.சி.
- அதிகாரப்பூர்வமின்றி ஏரி போன்ற நீர்நிலைகளில் சேமிக்கப்படும் நீரின் அளவு 30 டி.எம்.சி.
- மேகதாது அணையும் கட்டப்பட்டால் மொத்தக் கொள்ளளவு 214.57 டி.எம்.சியாக அதிகரிக்கும்.
- இவ்வளவு நீர் கர்நாடகத்தில் தேக்கப்பட்டால் தமிழகத்திற்கு தண்ணீர் வராது; காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகும்.
டெல்டா மாவட்டங்களுக்கு ஏற்படக்கூடிய இழப்புகள் என்ன?
- தஞ்சாவூர் மாவட்டத்தில் 4 லட்சம் ஏக்கர், திருவாரூர் 4 லட்சம் ஏக்கர், நாகை & மயிலாடுதுறை 3.50 லட்சம் ஏக்கர், திருச்சி 2.40 லட்சம் ஏக்கர், கடலூர் 1.10 லட்சம் ஏக்கர், புதுக்கோட்டை 28 ஆயிரம் ஏக்கர், அரியலூர் 24 ஆயிரம் ஏக்கர், கரூர் 22,500 ஏக்கர், ஈரோடு 17,230 ஏக்கர், நாமக்கல் 11,327 ஏக்கர் என 16 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் காவிரியால் பாசன வசதி பெறுகின்றன. மேகதாது அணை கட்டப்பட்டால் இந்நிலங்கள் பாசன ஆதாரத்தை இழக்கும்.
- தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழாக சென்று விடும். இதனால் காவிரி டெல்டா விரைவில் பாலைவனமாகி விடும்.
சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு ஏற்படும் இழப்புகள் என்ன?
- காவிரி பாயும் மாவட்டங்கள் தவிர சென்னை, காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக காவிரி திகழ்கிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் அம்மாவட்டங்கள் பாதிக்கப்படும்.
- காவிரி&குண்டாறு இணைப்புத் திட்டம், மேட்டூர் உபரி நீர் திட்டம் ஆகியவை முடங்கி விடும்.
- தருமபுரி&காவிரி உபரி நீர் திட்டம், அரியலூர் சோழர் பாசனத் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த முடியாது.
மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்களுக்கு நன்மையா?
- மேகதாது அணையால் கர்நாடகத்தை விட தமிழ்நாட்டுக்கு தான் அதிக நன்மை என கர்நாடக ஆட்சியாளர்கள் திட்டமிட்டு பொய்பரப்புரை செய்கின்றனர்.
- வீணாக கடலில் கலக்கும் நீரை மேகதாதுவில் சேமித்து வைக்க முடியும் என்பதால், தமிழகத்திற்கு வழங்க கூடுதல் நீர் கிடைக்கும் என்பது கர்நாடகத்தின் வாதம்.
- ஆனால், 1924 முதல் இன்று வரை ஒருமுறை கூட நிர்ணயிக்கப்பட்ட அளவு நீரை காவிரியில் கர்நாடகம் திறந்து விட்டதில்லை.
- காவிரி மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகியவை பல முறை ஆணையிட்டும் கூட தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீர் தரவில்லை.
- உபரி நீரை மட்டுமே தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்து விட்டு வருகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் உபரி நீர் கூட கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது.
காவிரி டெல்டா உரிமைகளை பாதுகாக்க தீர்வு என்ன?
- மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 24.10.2018 ஆம் நாள் மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதியை ரத்து செய்வது தான் இச்சிக்கலுக்கு ஒரே தீர்வு.
- மத்திய அரசுக்கு அரசியல் அழுத்தம், சட்டப் போராட்டங்கள் மூலமே இதை சாதிக்க முடியும்.
- மேகதாது அணை சிக்கலுக்கு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டால் தமிழக உரிமை பறிபோகும்.
மேகதாது அணை கட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழகத்திற்கு எதிரான சதித் திட்டத்தை முறியடிப்பது குறித்து மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தவும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் ஜூலை 1 ஆம் தேதி பிலிகுண்டுலுவில் விழிப்புணர்வு பரப்புரையைத் தொடங்கி ஜூலை 4 ஆம் தேதி பூம்புகாரில் நிறைவு செய்கிறார்.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்





















