அனுமதி இல்லை.. நள்ளிரவில் சுழன்ற கிரேன்! திருமாவளவன் வருகையின் போது அம்பேத்கர் சிலை அகற்றம்...!
விழுப்புரத்தில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட 6 அடி உயர அம்பேத்கர் சிலையினை, வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நள்ளிரவில் கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர்.

விழுப்புரம்: விழுப்புரத்தில் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்ட 6 அடி உயர அம்பேத்கர் சிலையினை, வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நள்ளிரவில் கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் திருமாவளவன் திறப்பதற்காக வைக்கப்பட்ட இச்சிலை, கடைசி நிமிடத்தில் அகற்றப்பட்டதால் விசிகவினர் மத்தியில் பெரும் ஆதங்கமும், அப்பகுதியில் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
6 அடி உயரமுள்ள அம்பேத்கர் சிலை
விழுப்புரம் மாவட்டத்திற்கு நேற்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினரும், சமூகநீதி அமைச்சருமான வன்னிஅரசு ஆகியோர் வருகை தந்தனர். இவர்களுக்கு விழுப்புரம் மாவட்ட எல்லை முதல் விசிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வந்தனர். இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் பழைய மருத்துவமனை எதிரே உள்ள ஜி.ஆர்.பி. (GRP) தெருவின் முனையில், விசிக மாவட்ட தொழிற்சங்க தலைவர் காசிநாதன் ஏற்பாட்டின் பேரில், விசிக தலைவர் திருமாவளவன் திறந்து வைப்பதற்காக 6 அடி உயரமுள்ள அம்பேத்கர் சிலை ஒன்று தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது.
கடைசி நிமிடத்தில் அனுமதி மறுப்பு:
நேற்று இரவு சுமார் 9 மணியளவில் விசிக தலைவர் திருமாவளவன் அந்த இடத்திற்கு வருகை தந்தார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், இந்த அம்பேத்கர் சிலையானது உரிய அரசு அனுமதியின்றி வைக்கப்பட்டிருப்பதாக விசிக தலைமையிடம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளைத் தவிர்க்கும் பொருட்டு, சிலையினைத் திறக்காமல் கட்சி நிர்வாகிகளின் மாலை வரவேற்பை மட்டும் திருமாவளவன் மற்றும் அமைச்சர் வன்னிஅரசு ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அங்கிருந்து புறப்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள போக்குவரத்துத் துறை அலுவலகம் பகுதியில் விசிக தொழிற்சங்கம் சார்பில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு அவர்கள் சென்றனர்.
நள்ளிரவில் கிரேன் மூலம் அப்புறப்படுத்துதல்:
அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலை என்பதால், அசம்பாவிதங்கள் ஏதும் நடப்பதற்குள் அதனை அகற்ற வருவாய்த்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, இன்று அதிகாலை 3 மணியளவில் வருவாய்த்துறை அதிகாரிகள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP) இளமுருகன், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் (DSP) ரூபன்குமார், கந்தசாமி ஆகியோர் தலைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஜி.ஆர்.பி. தெருவில் வைக்கப்பட்டிருந்த அந்த அம்பேத்கர் சிலையினை கிரேன் உதவியுடன் பத்திரமாக அப்புறப்படுத்திய அதிகாரிகள், அதனை விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.
அதிகாரிகள் சமாதானம் - விசிகவினர் கலைவு:
சிலை அகற்றப்பட்ட தகவல் அறிந்து அங்கு திரண்ட விசிக நிர்வாகிகளிடம் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். "அரசிடம் உரிய அனுமதி பெற்ற பிறகு, இதே இடத்தில் முறைப்படி சிலையினை வைத்துக் கொள்ளலாம்" என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட விசிகவினர் அங்கிருந்து அமைதியாகக் கலைந்து சென்றனர்.
விசிக தலைவர் திருமாவளவனால் திறக்கப்படவிருந்த அம்பேத்கர் சிலை, கடைசி நிமிடத்தில் அனுமதி இல்லாததால் திறக்க முடியாமல் போனது விசிக தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நேற்று இரவு முதல் அப்பகுதியில் நிலவி வந்த பதற்றமான சூழ்நிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
Before You Go
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
ட்ரெண்டிங் செய்திகள்






















