இணையத்தில் டிரெண்டாகும் சேலம் 'கியூ' வீடியோ - டாஸ்மாக் மூடியதால் தனியார் பார்களில் முண்டியடித்த கூட்டம்
சேலத்தில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு எதிரொலியால் தனியார் பார்களில் மது விற்பனை அமோகம். நீண்ட கியூ வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்ற மது பிரியர்கள்.

சேலத்தில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் முறையைக் கைவிடக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் மூன்று நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மனமகிழ் மன்றத்தில் மதுவை வாங்க மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் முறையைக் கைவிட வேண்டும் மற்றும் கடைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சேலம் மாவட்டத்தில் 174 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தால், மதுபிரியர்கள் மதுவை வாங்க மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், டாஸ்மாக் கடைகள் அடைப்பு எதிரொலியால் சேலத்தில் இன்று தனியார் பார்களில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. மது பிரியர்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் (மனமகிழ் மன்றம்) பாரில் இன்று காலை திரளான மது பிரியர்கள் வந்து கியூ வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். வழக்கமாக சேலத்தில் உள்ள பல்வேறு 11 டூ 11 பார்களிலும் மது வகைகள் விற்கப்பட்டு வருகிறது. இந்த 11 டூ 11 பார்கள் பகல் 11 மணிக்கு திறந்து இரவு 11 மணிக்கு மூடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக டாஸ்மாக் மதுபான கடைகள் சேலம் முழுவதும் மூடப்பட்டுள்ளதால் தற்போது தனியார் பார்களிலும் மற்றும் 11 டூ 11 பார்களிலும் அதிகம் கூட்டம் கூட தொடங்கி இருக்கிறது. ஆனால், மனமகிழ் மன்றத்தில் உறுப்பினர்களுக்கு மட்டுமே மதுவை விற்பனை செய்ய வேண்டும் என்ற நிலையில் வெளியாட்களும் மது வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.
முதலமைச்சர் விஜய்க்கு மனு அளித்த டாஸ்மாக் ஊழியர்கள்
சில தினங்களுக்கு முன்பு, தமிழகத்தில் அண்மையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த பணியாளர்கள் அனைவருக்கும் அரசின் பிற துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் பணி அமர்த்த வலியுறுத்தி சேலம் மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி இருந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் கல்விக் கூடங்கள் அருகே செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை தமிழ்நாடு அரசு மூடிய நிலையில் மூடப்பட்ட மதுபான கடைகளில் பணிபுரிந்து வந்த பணியாளர்கள் அனைவருக்கும் அரசின் பிற துறைகளில் உள்ள காலி பணியிடங்களில் பணியமர்த்த வேண்டும் என டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர். மேலும் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டத்தினை தனியார் முகமை ஏற்படுத்தி அதன் மூலம் செயல்படுத்த வேண்டும், மதுபான கடைகளை இரவு 10 மணிக்கு மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் விற்பனை கணக்குகளை சரி பார்த்து வெளியே செல்ல பணியாளர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு மனு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்





















