பாமகவில் மீண்டும் பூகம்பம்; ராமதாஸ் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்? - போட்டுடைத்த பாமக முன்னாள் எம்.எல்.ஏ
ராமதாஸ் அய்யா யாருடைய கண்ட்ரோலுக்காவது சென்று விட்டாரா என்பது குறித்து நீங்கள் தான் கண்டுபிடித்து சொல்ல வேண்டும் - முன்னாள் எம்எல்ஏ அருள்

தந்தையும், மகனும் பிரியவே கூடாது என்று கூறியதாகவும், இதனால் பாதிப்பு ஏற்படும் என்று அனைவரும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தும், தேர்தலுக்கு முன்பு பிரிந்து விட்டு, தேர்தலுக்குப் பிறகு இணைந்துவிட்டார்கள் என்று பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் கூறியுள்ளார்.
சேலத்தில் பாமக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
ராமதாசுடன் இருந்த ஆதரவாளர்கள் அடுத்த கட்டம் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து தமிழகம் முழுவதும் இருந்து
முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறினர். தமிழகம் முழுவதும் இருந்து கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வருவார்கள்; அவர்கள் ஆலோசனை கூறுவார்கள் அதன் அடிப்படையில் முடிவெடுப்போம்;
சிலரை தவிர அனைவரும் ஒன்றாக இருப்பதாக கூறினார். யார் யார் வருகிறார்களோ அவர்களுடன் இணைந்து கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதாக கூறினார். சில முக்கிய நபர்களை அழைத்திருப்பதாகவும், அவர்கள் கூறும் கருத்துக்கள் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தந்தையும், மகனும் பிரியவே கூடாது என்று கூறியதாகவும், இதனால் பாதிப்பு ஏற்படும் என்று அனைவரும் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தும், தேர்தலுக்கு முன்பு பிரிந்து விட்டு, தேர்தலுக்குப் பிறகு இணைந்துவிட்டார்கள். என்ன செய்யலாம், எங்கு செல்லலாம் என்பது குறித்து நாளை வரும் பொறுப்பாளர்கள் கூறும் முடிவின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும். நாளை கலந்து கொள்ளும் நிர்வாகிகள் அனைவரிடமும் பேப்பர் கொடுப்போம்; அதில் வரும் நிர்வாகிகள் கருத்துக்கள் எழுதிக் கொடுப்பார்கள். அதன் அடிப்படையில் ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும்.
நேற்றும், இன்றும், நாளையும் என ராமதாஸ் அய்யா எங்களுக்கு எப்பொழுதும் கடவுள்தான். என்னவென்று வழிசொல்லாமல் கதவை சாத்திக்கொண்டார்; அவரே சாத்தி கொண்டாரா? அல்லது சாத்தப்பட்டதா? என்று தெரியவில்லை. வரும் பொறுப்பாளர்கள் என்ன சொல்கிறாரோ அதையும் தான் செய்வோம்” என்றார்.
தமிழகத்தில் உள்ள பாமக நிர்வாகிகள் ராமதாஸ் அய்யா பிரிந்தபோது அவருடன் இருந்தது; நாங்கள் செய்த பாவமா? எனவும் கேள்வி எழுப்பினர். “நாங்கள் கொலையா செய்துவிட்டோம்; அன்புமணி ஏற்றுக் கொள்பவரா? இல்லையா? கேள்வி கேட்பதற்கு, தைலாபுரம் தோட்டத்தில் இருந்து ஐயா பேப்பரில் எழுதி கொடுத்ததை தான் படித்தேன். 10 பாயிண்டுகள் கூறினால், அதில் இரண்டு மட்டுமே சொல்வேன். அந்த அளவிற்கு ராமதாஸ் அய்யா என்னை அன்புமணியை திட்ட சொல்வார்.

எங்கள் தரப்பில் இருந்து ஆட்களை அனுப்பி விட்டோம்; இரண்டு மணி நேரம் காக்க வைத்து ராமதாஸ் அய்யா பார்க்கவில்லை. யாருமே பார்க்க அனுமதி இல்லை என்று குறிப்பிட்டார்கள். ராமதாஸ் அய்யா யாருடைய கண்ட்ரோலுக்காவது சென்று விட்டாரா என்பது குறித்து நீங்கள் தான் கண்டுபிடித்து சொல்ல வேண்டும். ராமதாஸ் அய்யா கூறிய கருத்துக்களை நாளை கூட்டத்தில் தெரிவிக்கிறோம்” என்றார்.
பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, ஆளை வைத்து அடித்தாரே அன்புமணி.. அதை வைத்து அதனால் பாதுகாப்பு என்ற கேள்வி கேட்கிறீர்களா என்று கூறிவிட்டு, அன்புமணி எங்கள் அண்ணன் என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
மேலும், “அன்புமணியுடன் செல்பவர்கள் எல்லாம் போய்விட்டார்கள். இப்பொழுது போகாமல் இருப்பவர்கள் அவர் தலைமை பிடிக்காமல் போகாமல் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. நாளைய தினம் முடிவு தெரியும். பாமக அலுவலகத்திற்கு வரும்படி நிறைய நபர்களுக்கு அழைப்பு வந்தது. ஆனால் போகவில்லை. இதற்கான முடிவை கடிதத்தில் உள்ள கருத்துக்களை பிரித்து பார்த்து ஒரு வாரத்துக்குள் நாட்களுக்குள் தெரிவிப்போம்” என்றார்.
Before You Go
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
ட்ரெண்டிங் செய்திகள்






















