TVK Government : ‘சிறிய பணிகளுக்கும் டெண்டர் – குஷியில் ஒப்பந்ததாரர்கள்’ தவெக அரசின் சிறப்பான முடிவு..!
குறிப்பிடும் தொகையை காட்டிலும் கூடுதல் தொகையை குறிப்பிட்டே டெண்டர் எடுக்கும் முறை இருந்துவந்த நிலையில், அரசின் மதிப்பிட்டை விட குறைவாக குறிப்பிட்டு டெண்டர் எடுக்க போட்டியிடுவது தவெக ஆட்சியின் மாற்றம்

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்த பின்னர் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பொதுப்பணித்துறை, கட்டடம், சாலை உள்ளிட்ட டெண்டர் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் ஒரு பைசா லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. கட்சி நிதி, அமைச்சர் நிதி என எதுவும் வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக சாலை உள்ளிட்ட பணிகளை தரமாக செய்துகொடுங்கள் எனவும் ஒப்பந்ததார்களை அழைத்து ஓபனாக அறிவித்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.
இதனையடுத்து பல டெண்டர்கள் வெளிப்படைத்தன்மையோடும், போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டும் வெளியிடப்பட்டிருக்கிறது. டெண்டர்களில் முன் எப்போதும் இல்லாத அளவில் புது ஒப்பந்தத்தாரர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருப்பது ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
உண்மையிலேயே வெளிப்படைத்தன்மை – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி
குறிப்பாக, சிறிய பணிகள் டெண்டர் முறையில் தரப்படாமல், சில குறிப்பிட்ட ஒப்பந்தத்தார்களுக்கு நேரடியாக ஒப்படைக்கப்படுவதாக கடந்த திமுக ஆட்சியில் புகார் எழுந்திருந்தது. இந்நிலையில், அப்படியான டெண்டர்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் அதிரடியாக நிறுத்தியிருக்கிறது தவெக அரசு.
சிறிய பணிகள் உள்ளிட்ட அனைத்து கட்டடம், சாலை உள்ளிட்ட பணிகளும் ஓப்பன் டெண்டர் முறையில் வெளியிடப்பட்டு, அதில் பல போட்டியாளர்களை பங்கேற்க வைத்து, டெண்டரை வெளிப்படையாக நடத்தும் நடைமுறையை தவெக அரசு உண்மையிலேயே செய்திருக்கிறது என கூறியிருக்கிறார்கள் ஒப்பந்ததாரர்கள்.
சென்னையில் அதிரடி மாற்றம்
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு சேதமைடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளுக்கான டெண்டர் வெளியிடப்பட்டது. இதில், ஒப்பந்ததாரர்கள் அரசின் மதிப்பிட்டு தொகையை விட 25 முதல் 30 % வரை குறைவாக தொகையை குறிப்பிட்டுள்ளனர். கடந்த வாரம், சென்னை மாநகராட்சியின் பேருந்து வழித்தட சாலைத்துறை பல சாலை சீரமைப்பு பணிகளுக்கான டெண்டர்களை வெளியிட்டது.
அம்பத்தூர் மண்டலத்தில் ₹25 லட்சம் மதிப்பிலான ஒரு பணிக்கான டெண்டரில் 9 ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர். இதில் ஒருவர் மட்டும் மதிப்பீட்டை விட 5 சதவீதம் அதிகமாகக் குறிப்பிட்டிருந்தார். மற்ற எட்டு பேரும் மதிப்பீட்டை விட 25 % முதல் 30% வரை குறைவாகக் குறிப்பிட்டதால், திட்டத்தின் மதிப்பு சுமார் ₹17 லட்சமாகக் குறைந்திருக்கிறது. தண்டையார்பேட்டையில் ₹30 லட்சத்திற்கும் கூடுதல் மதிப்புள்ள மற்றொரு சாலைப் பணிக்கான டெண்டரில் 10 ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர். அவர்கள் 25 சதவீதம் வரை குறைவான விலையை குறிப்பிட்டிருக்கின்றனர்.
ஆனால், சோளிங்கநல்லூரில் சில ஒப்பந்ததாரர்கள் மதிப்பீட்டை விட 36 சதவீதம் வரை குறைவாக தொகையை குறிப்பிட்டுள்ளதால் இவ்வளவு குறைந்த செலவில் தரமான பணிகளை மேற்கொள்ள முடியுமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அந்த டெண்டரை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
வழக்கத்திற்கு மாறான மாற்றம்
வழக்கமாக அரசு டெண்டரில் குறிப்பிடும் தொகையை காட்டிலும் கூடுதல் தொகையை குறிப்பிட்டே டெண்டர் எடுக்கும் நடைமுறை இருந்துவந்த நிலையில், அரசின் மதிப்பிட்டை விட குறைவாக குறிப்பிட்டு ஒப்பந்ததாரர்கள் டெண்டர் எடுக்க போட்டியிடுவது தவெக ஆட்சியின் ஒரு சிறந்த மாற்றமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மாநகராட்சி குறிப்பிடும் தொகையை காட்டிலும் 30% மேல் குறைவாக குறிப்பிட்டு ஒப்பந்ததாரர்கள் அந்த டெண்டரை எடுத்தால், அந்த தொகையில் குறிப்பிட்ட பணிகள் தரமானதாக செய்யமுடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில், பணியின் தரத்தை உறுதிப்படுத்த அரசு பொறியாளர்களை தீவிரமாக ஆய்வு செய்ய உத்தரவிட்டிருக்கிறது அமைச்சர் தரப்பு.
கட்சி நிதி இல்லை ; அமைச்சர் நிதி வேண்டாம்
இது பற்றி ஒப்பந்ததாரர் ஒருவரிடம் பேசியதுபோது, ”உதாரணத்திற்கு கடந்த காலங்களில் ஒரு டெண்டரை எடுக்கும்போது அரசு நிர்ணயித்த தொகை 10 கோடி என்றால் அதில் 7 கோடி ரூபாய் பணிகளுக்கும் மூன்று கோடி ரூபாய் கட்சி நிதி, அமைச்சர் நிதி என்ற பெயரில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும் என்ற குற்றச்சாட்டு இருந்தது. இப்போது அது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதால், Party Fund என்ற கட்சி நிதியும், MF என்ற அமைச்சர் நிதியும் கொடுக்கத் தேவையில்லை. இதனால், அரசு குறிப்பிட்ட தொகைக்கோ அல்லது அதைவிட குறைவாகவோ ஒப்பந்ததாரர்கள் பணிகளை எடுக்க முன்வந்துள்ளனர். இது ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமின்றி அரசுக்கும் பெரிய அளவில் நிதி சேமிப்புக்கு வழிவகுக்கிறது” என்றார்
Before You Go
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
ட்ரெண்டிங் செய்திகள்






















