TN BJP Clash: பார்சல் பண்ணத் துடிக்கும் சீனியர்ஸ்.. அடம் பிடிக்கும் அண்ணாமலை.. வெற்றி யாருக்கு.?
அண்ணாமலையை மேலிடத்திற்கு பார்சல் செய்துவிட்டு, மாநில அரசியலை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர பாஜக சீனியர்ஸ் முயன்று வருவதாகவும், அண்ணாமலையின் பிளான் வேறு விதமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு, மத்திய அமைச்சர் பதவியை கொடுத்து, அவரை மாநில அரசியலில் இருந்து ஓரங்கட்டுவதற்கான வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதன் பின்னணியில் பாஜக சீனியர்களின் ஸ்கெட்ச் இருப்பதாக கூறப்படும் நிலையில், மாநில அரசியலை விட்டு போக மாட்டேன் என அண்ணாமலை அடம்பிடித்து வருவதாக சொல்கின்றனர்.
அண்ணாமலையை மாற்ற பாஜக சீனியர்ஸ் ஸ்கெட்ச்
2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பக்கம் அதிமுகவை இழுக்கும் முயற்சியில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக அண்ணாமலை தான் என கூறப்படுகிறது. பாஜக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றால், அண்ணாமலை தமிழக மாநிலத் தலைவராக இருக்கக் கூடாது என்றும், அவரை நீக்கிவிட்டு, தங்களுடன் இணக்கமாக இருக்கும் ஒரு நபரைத் தான் பாஜக தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் அதிமுக கண்டிஷன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி, கூட்டணிக் கணக்கை கருத்தில் கொண்டு, தற்போது பாஜக தமிழக தலைவராக இருக்கும் அண்ணாமலையை நீக்கிவிட்டு, அதிமுகவுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கும் நயினார் நாகேந்திரனை பாஜக தலைவராக நியமிக்க டெல்லி தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, தலைவருக்கான ரேஸில் கருப்பு முருகானந்தமும் குதித்த நிலையில், அவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதால், தலைமை யோசித்து வருவதாகவும், அதனால் நயினாருக்கே வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிகிறது. இதற்கிடையே, அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பொறுப்பையும் வழங்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இந்த சம்பவங்களுக்குப் பின்னணியில் பாஜக தமிழக சீனியர்களின் ஸ்கெட்ச் இருப்பதாக சொல்கின்றனர்.
சீனியர்களுக்கு கைகொடுக்கும் அதிமுக கூட்டணி விவகாரம்
அண்ணாமலை மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து, சீனியர் தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன், பொன் ராதகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரை ஓரம் கட்டிவிட்டு, தமிழகத்தில் பாஜகவை தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் அவர் கொண்டுவந்ததால், அவர்கள் கடுப்பில் இருந்ததாக கூறப்பட்டது. இதனால், சீனியர்கள் பேச்சை கேட்காமல் தன்னிச்சையாக செயல்படும் அண்ணாமலையை ஓரம்கட்டுவதற்காக, அவரது செயல்பாடுகள் குறித்து டெல்லி தலைமையின் காதுகளுக்கும் அவர்கள் புகாரை கொண்டு சென்றதாக தெரிகிறது.
இந்த நேரத்தில் அதிமுக கூட்டணி விவகாரம் பாஜக சீனியர்களுக்கு பெரும் ப்ளஸ்ஸாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தை வைத்து, அண்ணாமலையிடம் இருந்து மாநில தலைவர் பதவியை பிடுங்கிவிட்டு, தேசிய அரசியல் பக்கம் அவரை திருப்பிவிட்டால், தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போது தங்களுடைய பேச்சு தான் எடுபடும் எனத சீனியர்கள் கணக்கு போட்டுள்ளனர். அதேபோல், 2026 தேர்தலை குறிவைத்து, தமிழ்நாட்டில் இருந்து ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால், அது தேர்தல் நேரத்தில் கைகொடுக்கும் என்ற எண்ணமும் பாஜக தலைமைக்கு இருப்பதாக தெரிகிறது.
மேலிடத்தில் அடம்பிடித்துவரும் அண்ணாமலை.?
ஆனால், மாநில அரசியல் தான் எனக்கு வேண்டும் என அண்ணாமலை அடம்பிடித்து வருவதாகவும், 2026 தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கேட்டு, டெல்லி தலைமையிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு பக்கம் அண்ணாமலையை மாநில அரசியிலில் இருந்து ஓரம் கட்டினால்தான், தங்கள் அரசியல் வாழ்க்கைக்கு நல்லது என்று நினைத்து, சீனியர்கள் உள்ளடி வேலைகளை பார்த்து வருவதாக கூறுகின்றனர். இதனால், தமிழகத்தில் பாஜகவினர் இரண்டு தரப்பாக மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் வெற்றி யாருக்கு என்பது, வரும் 9-ம் தேதி டெல்லியில் நடைபெறும் பாஜக கூட்டத்தில் தெரிந்துவிடும் என கூறப்படுகிறது. அதுவரை பொறுத்திருப்போம்...





















