பூம்புகாரில் வன்னியர் சங்க மகளிர் மாநாடு: ராமதாஸ் தலைமையில் கூடும் பெரும் கூட்டம்! காவல்துறை விதித்த 41 நிபந்தனைகள்..
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் பா.ம.க. நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் வன்னியர் சங்க மகளிர் மாநில மாநாடு அரசியலில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ம.க.வில் மருத்துவர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்துவேறுபாடு காரணமாக இருபிரிவாக செயல்பட்டு வரும் நிலையில் பூம்புகாரில் நடைபெற உள்ள வன்னியர் சங்க மகளிர் மாநாடு பெரும்பரபரப்பையும் அரசியலில் வட்டாரத்தில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வன்னியர் சங்க மகளிர் மாநில மாநாடு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பூம்புகாரில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் அறிவுரைப்படி பெண்ணுரிமையை காக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறையை போக்கவும், பெண்கள் முன்னேற்றம் காணவும் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்தும் மகளிர் பெருவிழா மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பூம்புகாரில் நடைபெறுகிறது.

கலந்துக்கொள்ளும் முக்கிய நிர்வாகிகள்
இந்த மாநாட்டில் சரஸ்வதி ராமதாஸ், பா.ம.க. கெளரவ தலைவர் ஜி.கே. மணி., வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள். பூம்புகாரில் இன்று மாலை மகளிர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ள நிலையில் மாநாடு ஏற்பாடுகளை நேற்று இரவு பா.ம.க. நிறுவனர் டாக்டா் ராமதாஸ் பார்வையிட்டார். அப்போது ஜி.கே.மணி எம்.எல்.ஏ., தஞ்சை மாவட்ட செயலாளர் ம.க. ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பாக்கம் சக்திவேல்,மண்டல செயலாளர் எஸ்.ஏ. அய்யப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.பூம்புகாரில் பா.ம.க. மகளிர் பெருவிழா மாநாடு நடக்க உள்ள நிலையில் 41 நிபந்தனைகளை மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் விதித்துள்ளனர்.

காவல்துறையின் சில நிபந்தனைகள்
- மாநாடு நடைபெறும் இடத்தில் தீயணைப்பு மற்றும் மருத்துவ உதவி அளிக்கும் வாகனங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- மாநாட்டில் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இரட்டை அடுக்கு தடுப்புகள் அமைப்பது, அவசர சூழ்நிலைகளின்போது மாநாடு நடைபெறும் பகுதியில் இருந்து விரைவாக வெளியேற போதுமான எண்ணிக்கையில் நுழைவுவாயில் அமைக்க வேண்டும்.
- மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் வந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
- மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் வந்து செல்ல தடை செய்யப்பட்ட வழித்தடமான மணல்மேடு, பட்டவர்த்தி, வைத்தீஸ்வரன்கோவில் மற்றும் திருவெண்காடு, நெய்தவாசல், தர்மகுளம் ஆகிய இருவழித்தடங்களை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
- மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உள்ளிட்ட 41 நிபந்தனைகளை காவல்துறையினர் விதித்து உள்ளனர்.

முன்னதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் இன்று மாலை நடைபெறும் மகளிர் மாநில மாநாடிற்காக கடந்த மாதம் ஜூலை 27 ஆம் தேதி பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கி மாநாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மாநாட்டு பந்தல் மற்றும் மேடை அமைக்கும் இறுதி கட்டப் பணிகளை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கௌரவத் தலைவர் ஜி கே மணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேற்று இரவு பார்வையிட்டனர். இன்று மாலை மாநாடு நடைபெறும் நிலையில் மாநாட்டு மேடையில் எல்.இ.டி திரை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
1300 காவல்துறையினர்
மேலும் மாநாடு பந்தல் முழுவதும் 14 ஆயிரம் நாற்காலிகள் தற்காலிக கழிப்பிடம், குடிநீர் என அனைத்து ஏற்படுகளும் தயர் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கரூர், புதுக்கோட்டையை சேர்ந்த 1300 போலீசாரும், மூன்று தீயணைப்பு வாகனங்கள், பத்து மருத்துவர்களுடன் கூடிய நான்கு 108 வாகனங்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளர்.






















