TN Election 2026 ; மன்னிப்பு கேட்ட பாமக வேட்பாளர் திலகபாமா !! ஏன் தெரியுமா ?
வாக்கு சேகரிப்பின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் , பள்ளி கல்லூரிக்கு சென்ற மாணவ மாணவியர்களிடம் மன்னிப்பு கேட்ட பெரம்பூர் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா

சட்டமன்ற தேர்தல் தீவீர வாக்கு சேகரிப்பு
தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் பல்வேறு கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் பல்வேறு விதமாக வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர் திலகபாமா கொடுங்கையூர் பகுதிக்கு உட்பட்ட பார்வதி நகர் , திருத்தங்கல் நாடார் கல்லூரி , ஆறுமுகம் டீக்கடை , கடும்பாடி அம்மன் கோயில் பகுதி , தென்றல் நகர் , துர்க்கை அவென்யூ , என்.எஸ்.கே சாலை , ஸ்கூல் ரோடு , ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொது மக்கள் மத்தியில் வாக்குகள் சேகரித்த பா.ம.க பெரம்பூர் சட்ட மன்ற தொகுதி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தும் , ஆர்த்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.
தமிழகத்தின் தலை சிறந்த தொகுதி
கடந்த தேர்தல் பரப்புரையில் மதுபான கடைகள் மூடப்படும் என திமுக அறிவித்தார்கள் ஆனால் அவர்கள் செய்யவில்லை. நாங்கள் ஆட்சி அமைத்தவுடன் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியை தமிழகத்தின் தலை சிறந்த தொகுதியாக மாற்றுவேன்.
பட்டா பிரச்சனைகள் உள்ள பகுதிகளை சரி செய்து பட்டா வழங்கப்படும். மழைநீர் கால்வாய் கழிவு நீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன் என கூறினார்.
பின்பு , அங்கிருந்த இளநீர் கடையில் இருந்து விற்பனையாளர் கொடுத்த இளநீரை வேட்பாளர் திலகபாமா அருந்தினார்.
மன்னிப்பு கேட்ட திலகபாமா
வேட்பாளர் வாக்கு சேகரிக்கும் போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பள்ளி , கல்லூரி மாணவ மாணவியர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் , இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் மெதுவாக சென்றன. உடனடியாக பிரச்சார வாகனத்தில் இருந்த மைக்கை ஆன் செய்து " இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது " என உறுதியளித்தார்.























