திமுகவால் எதிர்கட்சிகளிடம் சிக்கிய தவெக அரசு.! அடுத்தடுத்து பதில் அளித்த ஆனந்த், ஆதவ்- நடந்தது என்ன.?
மேகதாது அணை பிரச்சனையில் புதிய காவிரி நடுவர் மன்றம் அமைப்பதால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை என நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மேகதாது தீர்மானம் - எதிர்கட்சிகள் எதிர்பு
மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது புதிய காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் உதயநிதி கோரிக்கை விடுத்தார். இதனை உடனே ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் விஜய் மேகதாது தீர்மானத்தில் அந்த கருத்தையும் சேர்த்து கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தவெக அரசுக்கு ஆதரவு கட்சியான கம்யூனிஸ்ட் தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. மேலும் இன்று சட்டப்பேரவையில் கூட்டம் தொடங்கியதும், மேகதாது விவகாரத்தில் உரிமை மீறல் தொடர்பாக அதிமுக பிரச்சனையை எழுப்பியது. இதனால் தமிழக சட்டமன்றம் பரபரப்பான சூழல் உருவானதையடுத்து அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா விளக்கம் அளித்தனர்.
அமைச்சர் ஆனந்த் விளக்கம்
அந்த வகையில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பேசுகையில், காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், நமது மாநிலத்தின் வரலாற்று சிறப்புமிக்க நதிநீர் உரிமைகளையும் காப்பதில் அரசு துளியும் சமரசம் செய்து கொள்ளாது என்றும், கர்நாடகாவின் தற்போதைய முதலமைச்சர், மேகதாது பிரச்சனையை சமீபத்தில் எழுப்பிய உடனேயே, தமிழக முதலமைச்சர் 25.05.2026 அன்று அரசு தலைமை வழக்கறிஞர், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து இப்பிரச்சனை குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அறிவுறுத்தியதாகவும், அத்துடன் நிற்காமல், முதல்வர் அடுத்த நாளே 26.05.2026 தனது கடிதத்தின் வாயிலாகவும், 27.05.2026 அன்று இந்திய பிரதமரை நேரில் சந்தித்தும், மேகதாது திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என மீண்டும் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
பிரதமருக்கு சென்ற தீர்மானம்
மேலும், தமிழக முதலமைச்சர் 25.05.2026 அன்று உத்தரவிட்டதின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு சார்பாக புதுடெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் மேகதாது திட்டத்தை எதிர்த்து 27.05.2026 அன்று ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், கடந்த 18ம் தேதி முதலமைச்சர், அமைச்சர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு மற்றும் பன்மாநில நதிநீர் பிரிவினைத் தலைவர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார் என்றும், கடந்த 19ம் தேதி மேகதாது அணை தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அதன் நகலை அன்றே தனது நேர்முகக் கடிதம் வாயிலாக முதலமைச்சர், பிரதமருக்கு அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கட்டுமானப் பணிகள் நடக்க கூடாது
தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமலும், நடுவர் மன்றத் தீர்ப்புக்கு முரணாகவும் மேகதாது பகுதியில் எந்த ஒரு கட்டுமானப் பணிகளும் அனுமதிக்கக் கூடாது என்றே அக்கோரிக்கையில் மிகவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், 2018 உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டிற்கு உறுதி செய்யப்பட்ட 50% நம்பகத்தன்மை கொண்ட 177.25 டி.எம்.சி தண்ணீர் பங்கீட்டை எந்த ஒரு புதிய நடுவர் மன்றமும் மாற்ற முடியாது. எனவே கர்நாடகா தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய 177.25 டி.எம்.சி-யில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றார்
காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) நிராகரித்துவிட்டது என்று கூறுவது முற்றிலும் தவறானது என்றும், காவிரி மேலாண்மை ஆணையம் (CWMA) கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை (DPR) நிராகரிக்கவில்லை, மாறாக எவ்வித கருத்தும் கூறாமல் மத்திய நீர்வள ஆணையத்திடமே (CWC) திருப்பி அனுப்பியுள்ளதாகவும்,எனவே ஆபத்து இன்னும் நீங்கவில்லை என்றும், புதிய நடுவர் மன்றம் அமைவதால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இது ஒரு லீகல் ஸ்டேட்டர்ஜி
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் அதவ் அர்ஜூனா,மேகதாது அணை கட்டக்கூடாது என்ற வகையிலான புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பதுதான் நமது சட்டவல்லுனர்களின் ஆலோசனை. இதற்கும் 2018ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. சட்ட வல்லுநர்களின் ஆலோசனைப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். புதிதாக நடுவர் மன்றம் வரும்போது நமக்கான கால அவகாசம் கிடைக்கும். மேகதாது அணை தொடர்பாக அணையை கட்ட வேண்டுமா கட்டக்கூடாதா? . மேகதாதுவிற்காக மட்டுமே புதிய நடுவர் மன்றம்உருவாக்க தயாராக உள்ளோம்.
கர்நாடகா மாநிலத்தில் குடிநீர் பிரச்சினை இருப்பதாக கூறி சட்ட சிக்கல் நிறைந்த மற்றொரு ஸ்டேடர்ஜியை கர்நாடக அரசு எடுக்கிறது. கர்நாடகா அரசு மேகதாது அணையில் புதிதாக அணையை கட்டுவதாக கூறுகிறது. இதனை தடுக்க புதிதாக ஒரு நடுவர் மன்றம் புதிதாக உருவாக்க வேண்டும் என முதல்வர் முடிவெடுத்துள்ளார். தமிழக மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் நாம் ஒரே கூட்டணியாக எப்பொழுதும் குரல் கொடுப்போம். தமிழ்நாடு முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி நமது தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்டுவார் இது ஒரு லீகல் ஸ்டேட்டர்ஜி என்பதை நாங்கள் பதிவு செய்து கொள்கிறோம் என ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
Before You Go
"வேதனையில் இருக்கும் சிறுவனை இப்டியா இமிடேட் செய்வது" கொந்தளித்த TRB ராஜா
ட்ரெண்டிங் செய்திகள்






















