மயிலாடுதுறை திமுக பொதுக்கூட்டத்தில் அதிர்ச்சி! அமைச்சர் போனதும் காலி நாற்காலிகள்: என்ன நடந்தது?
மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், அமைச்சர் மெய்யநாதன் உரை முடிந்ததும் பொதுமக்கள் கலைந்து சென்ற நிலையில் காலி இருக்கைகளுக்கு மத்தியில் தலைமைக்கழகப் பேச்சாளர் உரையாற்றினார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திமுக சார்பில் நடைபெற்ற "தமிழ்நாடு தலைகுனியாது" பொதுக்கூட்டத்தில், அமைச்சர் பேசி முடித்த கையோடு பொதுமக்கள் கலைந்து சென்றதால், தலைமைக்கழகப் பேச்சாளர் காலி இருக்கைகளைப் பார்த்து உரையாற்றும் சூழல் ஏற்பட்டது. இறுதியாக மேடையில் இருந்தவர்கள் மட்டும் முழக்கமிட்டு கூட்டத்தை நிறைவு செய்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற தலைப்பில் மாநில அரசின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சின்னக்கடை வீதி பகுதியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு திமுக மாவட்டச் செயலாளரும், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் திமுக தலைமைக்கழகப் பேச்சாளர் கம்பம் செல்வேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் தொடக்கத்தில் உள்ளூர் நிர்வாகிகள் உரையாற்றினர்.
அமைச்சர் உரைக்கு பின் கலைந்த கூட்டம்
இரவு சுமார் 8:00 மணியளவில் சிறப்புரையாற்றத் தொடங்கிய அமைச்சர் மெய்யநாதன், தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும், மயிலாடுதுறை தொகுதிக்கு செய்யப்பட்ட பணிகள் குறித்தும் விரிவாகப் பேசினார். அமைச்சரின் உரையைக் கேட்பதற்காகத் திரண்டிருந்த கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் அமர்ந்திருந்தனர். சரியாக 8:30 மணியளவில் அமைச்சர் தனது உரையை நிறைவு செய்தார்.
அமைச்சர் பேசி முடித்ததும், அடுத்ததாகத் தலைமைக்கழகப் பேச்சாளர் கம்பம் செல்வேந்திரன் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அமைச்சர் மேடையை விட்டு கீழே இறங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே, கூட்டத்தில் அமர்ந்திருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறத் தொடங்கினர்.
காலி இருக்கைகளுடன் ஒரு உரை
தலைமைக்கழகப் பேச்சாளர் கம்பம் செல்வேந்திரன் தனது பாணியில் அடுக்குமொழி வசனங்களுடன் உரையைத் தொடங்கினார். இருப்பினும், அவர் பேசத் தொடங்கிய 10 நிமிடங்களிலேயே மேடை முன்பு இருந்த பெரும்பாலான நாற்காலிகள் காலியாகின. முன் வரிசையில் இருந்த சில நிர்வாகிகள் மற்றும் மேடையில் இருந்தவர்களைத் தவிர, பொதுமக்களின் நடமாட்டம் அறவே இல்லை.
சாலையில் செல்வோரும், அங்கொன்றும் இங்கொன்றுமாக அமர்ந்திருந்த ஒரு சிலரை மட்டுமே பார்த்தபடி, கம்பம் செல்வேந்திரன் தனது உரையைத் தொடர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். பொதுவாகத் திமுக கூட்டங்களில் பேச்சாளர்களின் உரைக்குக் கிடைக்கும் வரவேற்பு, இங்கு தலைகீழாக மாறியது அங்கிருந்த நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
"தமிழ்நாடு வெல்லட்டும்" - மேடையில் மட்டும் ஒலித்த முழக்கம்
மக்கள் கூட்டம் கலைந்து செல்வதைக் கவனித்த பேச்சாளர், நிலைமையைப் புரிந்து கொண்டு தனது உரையைச் சுருக்கிக் கொண்டார். இரவு 8:50 மணியளவில் அவர் தனது உரையை நிறைவு செய்தார். கூட்டத்தின் இறுதியாக முறைப்படி முழக்கங்கள் எழுப்பப்படுவது வழக்கம்.
அதன்படி, மேடையில் இருந்த அமைச்சர் மெய்யநாதன், மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் எழுந்து நின்று, "தமிழ்நாடு வெல்லட்டும்" என முழக்கமிட்டனர். ஆனால், இந்த முழக்கத்திற்குப் பதில் முழக்கமிடக் கீழே மக்கள் யாரும் இல்லாததால், மேடையில் இருந்தவர்களின் சத்தம் மட்டுமே அந்தப் பகுதியில் எதிரொலித்தது.
பரபரப்பான விவாதம்
மயிலாடுதுறையின் முக்கிய வணிகப் பகுதியான சின்னக்கடை வீதியில் நடைபெற்ற இந்தச் சாதனை விளக்கக் கூட்டத்தில், பேச்சாளர் பேசும்போது நாற்காலிகள் காலியாகக் கிடந்த காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அமைச்சரின் உரை முடிந்தவுடன் மக்கள் கலைந்து சென்றது, ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட குறைபாடா அல்லது நேரமின்மையா எனப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
எது எப்படியோ, "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற முழக்கத்துடன் தொடங்கிய கூட்டம், காலி நாற்காலிகளுக்கு இடையே நிறைவு பெற்றது அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
























