Marudhu Azhugaraj Joined DMK : திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் நிர்வாகி! தட்டித்தூக்கிய ஸ்டாலின்!
அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளரும், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான மருது அழகுராஜ் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இன்று (செப்டம்பர் 18) இணைத்துக்கொண்டார்.

அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளரும், நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான மருது அழகுராஜ் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இன்று (செப்டம்பர் 18) இணைத்துக்கொண்டார்.
இபிஎஸ் மீது அதிருப்தி:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தவர் மருது அழகுராஜ். இவர் அதிமுகவின் முன்னாள் செய்தித் தொடர்பளராகவும், நமது அம்மா என்ற அதிமுக நாளிதழின் ஆசிரியராகவும் இருந்தவர். எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த இவர் கொஞ்ச நாட்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதராவகவும் செயல்பட்டார். ஆனால், தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் மீதும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
விஜய்க்கு ஆதரவு:
இந்த நிலையில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்க்கு தனது ஆதரவை அளித்துவந்தார். தனது சமூக வலைதள பக்கங்களிலும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து விஜய்க்கு ஆதராகவும் எழுதி வந்தார். இச்சூழலில் தான் மருது அழகுராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் இருக்கிறார் அவர் விரைவில் தவெகவில் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால், தவெக தரப்பில் இவருக்கான சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் வேறு எந்த கட்சியில் இணைவது என்று நீண்ட நாட்களாக தீவிர யோசனையில் மருது அழகுராஜ் இருந்ததாக சொல்லப்பட்டது.
திமுகவில் மருது அழகுராஜ்:
இச்சூழலில் தான் மருது அழகுராஜ் இன்று (செப்டம்பர் 18) தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அந்த வகையில் சென்னை அறிவாலயத்தில் தமிழ் நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் இணைந்துள்ளார். அப்போது இவருடன் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் திமுகவினர் இருந்தனர்.





















