அதிமுக வேஷம் போடுகிறது ; பாஜக மதவெறியை தூண்டிக்கொண்டு இருக்கிறது - அமைச்சர் பொன்முடி
எப்படியாவது மதவெறி, இனவெறி மொழி வெறியை தூண்டிவிட்டு எப்படியாவது தமிழகத்தில் புகுந்துவிடலாம் என கனவு கொண்டிருக்கிறது.

விழுப்புரம் : உச்ச நீதிமன்றம், தீர்ப்பின் மூலம் ஆளுநரை வாங்கு வாங்கு என்று வாங்கியுள்ளது. தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், வழக்கு வரக்கூடாது என்பதற்காக பாஜகவோடு ஒட்டிக்கொண்டு வேஷம் போட்டுக்கொண்டிருக்கிற அதிமுக என்று விழுப்புரம் அருகே நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசினார்.
விழுப்புரம் மாவட்டம் சித்திலம்பட்டு பகுதியில் திமுக சார்பில் இந்தி தினிப்பு எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. கவர்னர் சட்டமன்றத்திலேயே அம்பேத்கர் பெயரை சொல்லாமல், அரசு கொடுத்த திருத்தி படித்து சட்டமன்றத்தை அவமதித்த ஒருவரை உச்ச நீதிமன்றம் வாங்கு வாங்கு என்று வாங்கியுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதல்வர் எடுத்த நடவடிக்கை காரணமாக நமக்கு கிடைத்திருக்கும் வெற்றி. காவியுடன் ஒட்டுவதற்காக எல்லா நடவடிக்கையும் எடுத்து வருகிறது அதிமுக.
திமுக, பாஜக ஒன்றாக கூடினால் தான் நமக்கு சாதகமாக மாறும். எனவே தமிழகத்தை பொறுத்தவரை எந்த காலத்திலும் பிஜேபி நுழைவே முடியாது. எப்படியாவது மதவெறி, இனவெறி மொழி வெறியை தூண்டிவிட்டு எப்படியாவது தமிழகத்தில் புகுந்துவிடலாம் என கனவு கொண்டிருக்கிற பிஜேபி, அதனோடு தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
வழக்கு வரக்கூடாது என்பதற்காக இன்று அவர்களோடு ஒட்டிக்கொண்டு வேஷம் போட்டுக்கொண்டிருக்கிறது அதிமுக. யார் என்ன செய்தாலும் ஸ்டாலின் தலைமையிலான இந்த கூட்டணியை ஒன்றும் செய்ய முடியாது. வருகின்ற 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். வட மாநிலங்களில் ஆங்கிலம் கற்றுக் கொடுப்பதில்லை. உலக மொழியான ஆங்கிலமும், தாய்மொழியான தமிழும் என இருமொழி கொள்கையை கொண்டு வந்ததுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை.
இதை ஒழித்து மூன்றாவதாக ஒரு மொழியை கொண்டு வர பார்க்கிறார்கள். ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என கூறுகிறார்கள். ஹிந்தி படித்தவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து என்ன வேலை செய்கிறார்கள் என எல்லோருக்கும் தெரியும். வட நாட்டில் வேலை கிடைக்காததால் தான் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். நமக்கு இரு மொழி கொள்கையே எப்போதும். விழுப்புரம் மாவட்டத்தில் ஆட்சியர் பெயர்ப்பாடுகளில் தமிழில் வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். என பேசிக்கொண்டு இருக்கும் போது அருகில் உள்ள ஒரு கடையில் பெயர் பலகை ஆங்கிலத்தில் பெயர் இருப்பதை பார்த்து உடனடியாக அதனை தமிழிலே பெயர் பலகை மாற்றுங்கள் கடைக்காரரே என கேட்டுக்கொண்டார்.

