![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
AIADMK General Secretary Election: அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு..! முழு விவரம்..
அதிமுகவின் பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
![AIADMK General Secretary Election: அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு..! முழு விவரம்.. AIADMK General Secretary Election on March 26th Vote Counting on March 26th EPS vs OPS AIADMK General Secretary Election: அதிமுக பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு..! முழு விவரம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/17/ea770556b448c4ed74412027eccf3e581679061324521224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அதிமுகவின் பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 26-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்ட விதி: 20 (அ); பிரிவு - 2ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, “கழகப் பொதுச் செயலாளர்'' கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்" என்ற விதிமுறைக்கு ஏற்ப கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி நடைபெறும்.
வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள்: 18.03.2023 - சனிக் கிழமை (காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை )
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள்: 19.03.2023 - ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணி வரை
வேட்பு மனு பரிசீலனை: 20.03.2023 - திங்கட் கிழமை காலை 11 மணி
வேட்பு மனு திரும்பப் பெறுதல்: 21.03.2023 - செவ்வாய் கிழமை பிற்பகல் 3 மணி வரை
வாக்குப் பதிவு நாள்: 26.03.2023- ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை
வாக்கு எண்ணிக்கை: 27.03.2023 - திங்கட் கிழமை காலை 9 மணி முதல்
"கழகப் பொதுச்செயலாளர்" பொறுப்பிற்குப் போட்டியிட விரும்புவோர், மேற்கண்ட கால அட்டவணைப்படி, தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை ரூ. 25,000/- (ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் மட்டும்) செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்று, கழக சட்ட விதி - 20அ; பிரிவு - 1, (a), (b), (c) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி தங்களுடைய விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம்.
"கழகப் பொதுச் செயலாளர்" பொறுப்பிற்கான தேர்தல் முறையாக நடைபெறுவதற்கு, கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும், கழக உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மோதல் உச்சத்திற்கு சென்ற நிலையில், கடந்த மாதம் பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு தொடர்பான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்தது முதல் இ.பி.எஸ். தரப்பினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதேசமயம், இடைத்தேர்தல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு தேர்தல் தோல்விகள் காரணமாகவும், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் தரப்பினரின் வியூகம் காரணமாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில், பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)