மீண்டும் எடப்பாடி முதல்வராக வருவார்.. இதற்கெல்லாம் ஒரு முடிவு வரும் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அரசு அதிகாரியை அதிமுக நிர்வாகி அருள் தகாத வார்த்தையால் பேசியதாக கூறி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், கரூர் நகர போலீசார் அதிமுக நிர்வாகியை விசாரணைக்காக காவல் நிலையம் கைது செய்துள்ளனர்.

கரூரில் அதிமுக நிர்வாகி கைது செய்து காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தகவலறிந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர், ஆண்டாங்கோயில் மேல்பாகம் ஊராட்சிக்குட்பட்ட கோவிந்தம்பாளையம் பகுதியில் தாந்தோணி மேற்கு ஒன்றிய அதிமுக அம்மா பேரவை துணை தலைவர் அருள் தனது வீடு அருகே உள்ள நிலத்தில் கிராவல் மண் கொட்டி சுத்தம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆண்டாங்கோவில் மேல்பாக ஊராட்சி செயலாளர் பழனிச்சாமி நேரில் சென்று விளக்கம் கேட்டுள்ளார். அப்பொழுது அதிமுக நிர்வாகி ஊராட்சி செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்து அலைபேசி மூலம் பேசி உள்ளனர். அப்பொழுது அரசு அதிகாரியை அதிமுக நிர்வாகி அருள் தகாத வார்த்தையால் பேசியதாக கூறி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், கரூர் நகர போலீசார் அதிமுக நிர்வாகியை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்து அவரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கரூர் நகர காவல் நிலையத்தின் முன்பு திரண்டனர். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜய பாஸ்கர் மற்றும் அதிமுக வழக்கறிஞர் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை அடுத்து அதிமுக நிர்வாகி அருள் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தற்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,
சொந்த வீட்டு வேலைக்காக பணம் கொடுத்து கிராவல் மண்ணை கொட்டி பணி செய்த அதிமுக நிர்வாகி அருள் என்பவரை பொய் வழக்கில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப போலீசார் ஏற்பாடு செய்தனர். இரவு மணல் கொள்ளை நடக்கிறது. கஞ்சா விற்பனை நடக்கிறது. அதை காவல்துறை கேட்பதில்லை. அதிமுகவினர் என்றாலே பொய் வழக்கு போடுகின்றனர். ஆளுங்கட்சியினர் தூண்டுதலின் பேரில் கைது செய்துள்ளனர். மீண்டும் எடப்பாடி முதல்வராக வருவார். இதற்கெல்லாம் ஒரு முடிவு வரும் என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

