"இதோ நம்ம காமராஜர்!" - 124 நிமிடங்களில் பாரம்பரிய அரிசியில் மேஜிக் செய்த மாணவன் சாய் சரண்!
பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு, மயிலாடுதுறையில் 10-ஆம் வகுப்பு மாணவன் 124 நிமிடங்களில் பாரம்பரிய அரிசியால் காமராஜர் படம் வரைந்து சாதனை படைத்துள்ளார்.

மயிலாடுதுறை: தமிழக முன்னாள் முதல்வரும், கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் பகுதியில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ குருஞானசம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய உலக சாதனை நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது.
பெருமதிப்பிற்குரிய கர்ம வீரர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, அந்த எண்ணிக்கையைக் குறிக்கும் வகையில், 124 நிமிடங்களில் பாரம்பரிய அரிசி வகைகளைக் கொண்டு அவரது தத்ரூபமான உருவப்படத்தை வரைந்து பள்ளி மாணவன் ஒருவன் சாதனை படைத்துள்ளார்.
124 நிமிடங்களில் அற்புதம்
இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் சாய்சரண். ஓவியக் கலையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இந்த மாணவன், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளுக்கு வித்தியாசமான முறையிலும், அதே சமயம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அஞ்சலி செலுத்த விரும்பினார். இதற்காக நமது பாரம்பரிய அரிசி வகைகளை ஓவியத்திற்கான ஊடகமாகத் தேர்ந்தெடுத்தார். இன்று காலை பள்ள வளாகத்தில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், கடிகார முட்கள் நகரத் தொடங்கியதும் மாணவன் சாய்சரணின் கைகளும் வேகமாகச் செயல்படத் தொடங்கின. கருப்புக்கவுனி உள்ளிட்ட மருத்துவக் குணம் வாய்ந்த பல்வேறு வண்ணப் பாரம்பரிய அரிசி ரகங்களை மிகத் துல்லியமாகப் பயன்படுத்தி, காமராஜரின் முக அமைப்பை வடிவமைக்கத் தொடங்கினார்.
ஒட்டுமொத்தப் பள்ளியே மூச்சடக்கிப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், சரியாக 124-வது நிமிடத்தில், கம்பீரமான தோற்றத்துடன் கூடிய பெருந்தலைவர் காமராஜரின் உருவப்படம் அரிசி மணிகளால் கண்முன்னே தத்ரூபமாக உருப்பெற்றது. மாணவனின் இந்த அசாத்திய திறமையையும் வேகத்தையும் கண்டு அங்கிருந்த அனைவரும் கைதட்டிப் பாராட்டி நெகிழ்ந்தனர்.
மாணவன் சாய்சரணின் இந்த அரிய சாதனையான மிகக் குறுகிய காலத்தில், பாரம்பரிய நெல்மணிகளைக் கொண்டு வரையப்பட்ட இந்த பிரம்மாண்ட காமராஜர் ஓவியம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் நெகிழ்ச்சி
பாரம்பரிய அரிசியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், கல்வி வள்ளலுக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும் இந்த சாதனையை நிகழ்த்திய மாணவன் சாய்சரணுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்கள் பள்ளி மாணவன் சாய்சரண், கல்விக்கண் திறந்த காமராஜர் ஐயாவின் பிறந்தநாளில் இந்த சாதனையைச் செய்திருப்பது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. ஓவியக் கலையோடு நம் மண்ணின் பாரம்பரிய அரிசி வகைகளைப் பற்றிய விழிப்புணர்வையும் இந்தத் தலைமுறை மாணவர்களிடம் கொண்டு சேர்த்திருப்பது பாராட்டுக்குரியது. மாணவனின் இந்தத் திறமைக்குத் துணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் எங்களது வாழ்த்துகள்," என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இந்த சாதனை நிகழ்வின் போது, பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், கல்வி அதிகாரிகள் மற்றும் திருக்கடையூர் பகுதி பொதுமக்கள் எனப் ஏராளமானோர் கலந்து கொண்டு, சாதனை படைத்த மாணவன் சாய்சரணையும், அவனது பெற்றோரையும் நேரில் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தமிழகத்தின் கல்வி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த பெருந்தலைவருக்கு, மயிலாடுதுறை பள்ளி மாணவன் நெல்மணிகளால் அஞ்சலி செலுத்தி சாதனை படைத்த இந்த நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.
Before You Go
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























