"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டவும், அரசு நில ஆக்கிரமிப்பை அகற்றவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சோழம்பேட்டை கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்திற்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றும், அதற்குப் பின்புறம் உள்ள அரசு நில ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அப்பகுதி பெற்றோர்களும் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதிப்பில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்திற்குச் சொந்தமான அங்கன்வாடி மையம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் படித்து, மதிய உணவு உண்டு வருகின்றனர்.
தற்போது இந்த அங்கன்வாடி மையக் கட்டிடம் போதிய பராமரிப்பின்றி மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் மேற்கூரைகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுவதுடன், மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே ஒழுகி குளம் போல் தேங்குகிறது. இதனால், எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில் குழந்தைகளை மையத்திற்கு அனுப்பவே பெற்றோர்கள் அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளது.
"எங்கள் பிள்ளைகளை ஒவ்வொரு நாளும் பயந்துகொண்டேதான் இந்த மையத்திற்கு அனுப்புகிறோம். கட்டிடம் எப்போது விழுமோ என்ற பயம் எங்களை உலுக்குகிறது," என அப்பகுதியைச் சேர்ந்த தாய்மார்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
விஷ ஜந்துகளின் புகலிடமான பின்புறப் பகுதி
இந்த மோசமான கட்டிடத்தின் பின்புறம் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலம் அமைந்துள்ளது. இந்த இடம் நீண்ட நாட்களாகப் பராமரிக்கப்படாததால், அடர்ந்த காடு போலச் செடி, கொடிகள் மண்டிப் போய்க் கிடக்கின்றன. இதன் காரணமாக, அப்பகுதியில் பாம்புகள், தேள்கள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் பெருகி நடமாடுகின்றன.
பல நேரங்களில் இந்த விஷ ஜந்துகள் அங்கன்வாடி மையத்தின் உள்ளேயும், குழந்தைகள் விளையாடும் பகுதியிலும் நுழைந்து விடுவதால், குழந்தைகளின் உயிருக்குக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அரசு நிலத்தை ஆக்கிரமித்த தனிநபர்
பழுதடைந்த கட்டிடத்திற்குப் பதிலாக, அதே பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். புதிய கட்டிடம் கட்டுவதற்குப் பின்புறம் உள்ள அரசுப் புறம்போக்கு நிலமே பொருத்தமானது என அதிகாரிகள் தரப்பிலும் ஆலோசிக்கப்பட்டது.
நிலைமை இவ்வாறு இருக்க, அப்பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர், அந்த அரசுப் புறம்போக்கு நிலத்தை அராஜகமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார். நிலத்தைச் சுற்றி வேலி அமைத்தது மட்டுமின்றி, அங்கு ஒரு தகரக் கொட்டகையையும் சட்டவிரோதமாக அமைத்துள்ளார். இதனால் புதிய கட்டிடம் கட்டுவதற்கான வழி முற்றிலும் அடைபட்டுள்ளது.
அதிகாரிகளின் மெத்தனப் போக்கு
இந்த ஆக்கிரமிப்பு குறித்துப் பொதுமக்கள் தரப்பில் வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்குப் புகார்கள் அனுப்பப்பட்டன. புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் நிலத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பின், ஆக்கிரமிப்பு செய்த நபரிடம் இங்குத் தகரக் கொட்டகை அமைக்கக் கூடாது என்று அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு மட்டும் பிறப்பித்துவிட்டுச் சென்றுள்ளனர். ஆனால், அதிகாரிகள் சென்று பல நாட்களாகியும் ஆக்கிரமிப்பை அகற்ற எவ்விதத் தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கைப் பயன்படுத்திக் கொண்ட அந்தத் தனிநபர், தொடர்ந்து நிலத்தைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளார்.
பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கை
இதுகுறித்து சோழம்பேட்டை கிராம மக்கள் கூறுகையில், "அதிகாரிகள் வாய்மொழியாக எச்சரித்ததோடு தங்கள் கடமை முடிந்தது என நினைத்துவிட்டனர். முறையான எழுத்துப்பூர்வ நடவடிக்கை இல்லாததால் ஆக்கிரமிப்பு இன்னும் அகற்றப்படவில்லை. இதனால் எங்கள் கிராமக் குழந்தைகளின் எதிர்காலமும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டும். மேலும், இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய கட்டிடத்திற்கு மாற்றாக, அந்த இடத்தில் உடனடியாகப் புதிய அங்கன்வாடி மையக் கட்டிடத்தைக் கட்டிக் கொடுக்க வேண்டும்," என்றனர்.
இக்கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றத் தவறினால், குழந்தைகளைத் திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் எச்சரித்துள்ளனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன் அரசு விரைந்து செயல்படுமா என்பதைப்பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Before You Go
Bribery : ₹100 லஞ்சம்? "BUS-க்கு தான் மேடம் காசு இருக்கு" கெஞ்சிய புதுக்கோட்டை இளைஞர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























