கொட்டி தீர்க்கும் பருவ மழை, கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ’ரெட் அலர்ட்’ .. விபரம் இதோ..
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை நேற்று தொடங்கியது. தமிழகத்திலும் மழை பரவியுள்ள நிலையில், இன்றும், நாளையும் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு `ரெட் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கனமழை அறிவிப்பை அடுத்து இன்று (மே 26) 7 மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும். ஆனால் இம்முறை 16 ஆண்டுகள் கழித்து, முன் கூட்டியே பருவமழை தொடங்கி இருக்கிறது. ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு வாரம் முன்னதாகவே பருவமழை ஆரம்பித்து இருக்க, கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் அமுதா செய்தியாளர்களிடம் கூறியதாவது, தென்மேற்குப் பருவமழை கேரளாவில் நேற்று (மே 24) தொடங்கியது. தமிழகத்திலும் தென்மேற்குப் பருவமழை பெரும்பாலான பகுதிகளில் பரவியுள்ளது. அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மற்றும் தபோலிக்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடந்தது.
மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 27-ம் தேதி உருவாகக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் 27-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 28 முதல் 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்றும், நாளையும் கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
மேலும், வரும் 27-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 28-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தொடர் மழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களுக்கு முன் எச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதி கனமழை எதிர்பார்க்கப்படுவதால் கேரளாவில் 7 மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு இன்று (மே 26) விடுமுறை விடப்பட்டு உள்ளது. அதன்படி காசர்கோடு,கண்ணூர்,"வயநாடு,கோழிக்கோடு,திருச்சூர்,எர்ணாகுளம், இடுக்கி போன்ற மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.





















