மேலும் அறிய
தரமான கண் சிகிச்சை என்பது அனைத்து மக்களுக்குமான ஒரு அடிப்படைத் தேவையாகும் - அமைச்சர் மூர்த்தி !
தென் தமிழகத்தின் கிராமப்புற மக்களுக்காக நவீன வசதிகள் கொண்ட முதல் நடமாடும் கண் மருத்துவ சேவையை அறிமுகப்படுத்தும் மதுரை, ஆதி கண் மருத்துவமனை.

அமைச்சர் மூர்த்தி
Source : whatsapp
தனது 7-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்காக இலவச கண் பரிசோதனை மற்றும தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி அவர்கள் இந்த நடமாடும் கண் மருத்துவ வாகனத்தின் சேவையைத் தொடங்கி வைத்தார்.
நடமாடும் கண் மருத்துவ கிளினிக்
தென் தமிழகத்திலேயே முதன்முறையாக, கிராமப்புற மக்களின் நலனுக்காக அனைத்து தொழில்நுட்ப சாதனங்களும், கருவிகளும் பொருத்தப்பட்ட "நடமாடும் கண் மருத்துவ கிளினிக்" சேவையை மதுரையைச் சேர்ந்த கண் மருத்துவமனையான ஆதி கண் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. கண் பரிசோதனைக்கான இந்த நவீன மருத்துவ வாகனத்தின் செயல்பாட்டை தமிழ்நாட்டின் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தொடங்கி வைத்தார். இச்சேவையின் தொடக்கவிழா நிகழ்வில் மதுரை மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் எல்.அருள் சுந்தரேஷ் குமார், முன்னிலை வகித்தனர். இந்த நடமாடும் மருத்துவமனையில் கணினி வழி கண் பரிசோதனை, கண்புரை, குளுக்கோமா (கண் அழுத்த நோய்), கிட்டப்பார்வை மற்றும் நீரிழிவு நோயினால் ஏற்படும் கண் பாதிப்புகள் ஆகியவற்றைக் கண்டறியும் வசதிகள் உள்ளன. மேலும், அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழுவினர் மூலம் கண் பாதிப்புள்ள நபர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள், தரமான கண் கண்ணாடிகள் மற்றும் மருந்துகள் இந்த நடமாடும் கிளினிக்கிலேயே வழங்கப்படுகின்றன. குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் கண் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது மற்றும் சிறப்பாக பராமரிப்பு என்பதற்கான பரிந்துரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்படுவது கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும். மக்கள் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு நீண்ட தூரம் பயணிக்கும் சிரமமின்றி தங்கள் இடத்திலேயே உயர்தர கண் பரிசோதனைகளையும், ஆலோசனையையும் பெற இது வழிவகை செய்கிறது.
இலவச கண் பரிசோதனை
இம்மருத்துவமனையின் 7-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பொருளாதார வசதி இல்லாத மக்களுக்காக இலவச கண் பரிசோதனையை ஆதி கண் மருத்துவமனை வழங்குகிறது. மேலும் கண்புரை அறுவை சிகிச்சைகளையும், உயர்தர கண் பராமரிப்பையும் குறைந்த கட்டணத்தில் இது வழங்குகிறது. எந்த வயது பிரிவைச் சேர்ந்த நபராக இருப்பினும், பாதுகாப்பான, கனிவான கண் பராமரிப்பு சேவையை துல்லியமாக வழங்குவதற்கு மேம்பட்ட நோயறிதல் மற்றும் சிகிச்சை தொழில்நுட்பத்தை இம்மருத்துவமனை அனுபவம் மிக்க கண் சிகிச்சை நிபுணர்களைக் கொண்டு செயல்படுத்துகிறது.
அமைச்சர் மூர்த்தி
அமைச்சர் பி. மூர்த்தி இந்நிகழ்வில் உரையாற்றியபோது, "தரமான கண் சிகிச்சை என்பது, ஒரு சொகுசு வசதி அல்ல; அது அனைத்து மக்களுக்குமான ஒரு அடிப்படைத் தேவையாக இருக்கிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு இந்த நடமாடும் மருத்துவமனை ஒரு வரப்பிரசாதமாகும். கிராமப்புற மக்களுக்கு, தரமான கண் மருத்துவ சேவைகளை வழங்கி வருவதற்காக ஆதி மருத்துவமனையைச் சேர்ந்த அனைவரையும் நான் மனமார பாராட்டி மகிழ்கிறேன். தென் தமிழக மக்களின் நலனுக்காக இப்பிராந்தியத்தின் முதல் நடமாடும் கண் சிகிச்சை கிளினிக்கை அறிமுகம் செய்ததற்காகவும் அவர்களைப் போற்றி பாராட்டுகிறேன்." என்றார்.
90% பேர் கண்புரை பாதிப்பு
ஆதி கண் மருத்துவமனையின் தலைவர் திருமலைக்குமார் கூறுகையில்: "கிராமப்புறங்களில் 90% பேர் கண்புரை பாதிப்புக்கு ஆளாகின்றனர். இந்த ஏழை எளிய மக்களுக்கு குறித்த காலஅளவுகளில் கண் பரிசோதனைகள் என்பது, ஒரு சொகுசு வசதியாகவே இருக்கிறது. நம் நாட்டில், 85 முதல் 90% நபர்கள், தங்களுக்கு குளுக்கோமா (கண் அழுத்த நோய்) இருப்பதை கண்டறியாமலேயே வாழ்கின்றனர். நீரிழிவினால் ஏற்படும் கண் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறியாமல் விடுவதால் பலருக்கு பார்வை இழப்பு ஏற்படுகிறது. விழிப்புணர்வு குறைவாக இருப்பது மற்றும் மருத்துவ வசதிகள் அருகில் இல்லாதது இப்பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கிவிடுகிறது. இதைத் தவிர்க்கவே, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த நடமாடும் கண் மருத்துவ கிளினிக்கை நாங்கள் அறிமுகம் செய்து கிராமப்புற மக்களின் சேவைக்காக அர்ப்பணிக்கிறோம்" என்றார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























