மேலும் அறிய
அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் கைப்பேசிகள்.... குழந்தைகளின் நல்வாழ்வில் புதிய மைல்கல்!
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் 2000 அங்கன்வாடி பணியாளர்களுக்கு கைப்பேசிகளை வழங்கினார்.

செல்போன் வழங்கும் திட்டம்
Source : whatsapp
திருப்பாலை இ.எம்.ஜி யாதவா கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் 2000 அங்கன்வாடி பணியாளர்களுக்கு கைப்பேசிகளை வழங்கினார்கள்.
அமைச்சர் மூர்த்தி
நிகழ்ச்சியில் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவிக்கையில்...,“இன்றைய சமூகத்தில் அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்களது திறமையால் முத்திரை பதித்து வருகின்றனர். அதுபோல அங்கன்வாடி பணியாளர்களும் சமூகத்தின் அடித்தளத்தில் இருந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள் என்பது பெருமைக்குரியது. முதலமைச்சர் அவர்கள் மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய அங்கன்வாடி பணியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். மேலும் பெண்கள் பல்வேறு துறைகளில் மட்டுமல்லாமல் தேர்தல் போன்ற முக்கியமான பொது பணிகளிலும் தீவிரமாக பங்கேற்று தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர். எனவே, இதுபோன்ற அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் சமூக சேவையை தொடர்ந்து மேற்கொள்ள அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். மக்களின் நலனுக்காக நீங்கள் செய்து வரும் சேவை மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், தெரிவிக்கையில்,
தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யும் முக்கியமான சமூக நலத் திட்டமாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் செயல்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட திட்ட அலுவலகத்தின் கீழ் செயல்படும் 17 வட்டாரங்களுக்குட்பட்ட 2001 அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு திட்டப் பணிகளை மேலும் திறம்பட மேற்கொள்ள இன்று புதிய கைப்பேசிகள் வழங்கப்படுகின்றன. இந்த கைப்பேசிகள் மூலம் தாய் மற்றும் குழந்தைகள் தொடர்பான விவரங்களை போஷன் ட்ராக்கர் செயலியின் மூலம் உடனுக்குடன் பதிவு செய்து சேவைகளை திறம்பட கண்காணிக்க முடியும். கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலம் முதல் குழந்தை பிறப்பு வரை தேவையான ஊட்டச்சத்து இணை உணவு வழங்கப்படுவதில் அங்கன்வாடி பணியாளர்களின் பங்கு மிக முக்கியமானது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகாதாரத் துறையின் மூலம் தடுப்பூசி போடுதல் மற்றும் சத்து மாத்திரைகள் வழங்குதல் போன்ற பணிகள் முறையாக நடைபெறுவதற்கும் நீங்கள் ஒத்துழைத்து வருகிறார்கள். குழந்தை பிறந்த 6 மாத காலம் வரை பாலூட்டும் தாய்மார்களுக்கு மாதந்தோறும் செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து மாவு வழங்கப்படுகிறது. குழந்தை பிறந்த 6 மாதம் முதல் 2 வயது வரை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வகையில் ஊட்டச்சத்து இணை உணவுகள் வழங்கப்படுகின்றன. 2 முதல் 6 வயது வரை அங்கன்வாடி மையங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை இணை உணவாக சத்துமாவு உருண்டை வழங்கப்படுகிறது. அதேபோல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதிய உணவும் வழங்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் மாதந்தோறும் சுமார் 2 முதல் 3 வயது குழந்தைகளில் 15505 குழந்தைகளும் மற்றும் 3 முதல் 6 வயது குழந்தைகளில் 24643 குழந்தைகளும் முன்பருவ கல்வி மற்றும் மதிய உணவு திட்டத்தின் பயனாளிகளாக பயன்பெற்று வருகின்றனர். மேலும் ஒவ்வொரு மாதமும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிறப்பு முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளின் எடை மற்றும் உயரம் அங்கன்வாடி மையங்களில் உள்ள கருவிகளின் மூலம் அளவிடப்பட்டு போஷன் ட்ராக்கர் செயலியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 30 வரை போஷான் மா எனப்படும் ஊட்டச்சத்து மாதம் கொண்டாடப்பட்டு, மாவட்டம் முழுவதும் அங்கன்வாடி மையங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கன்வாடி பணியாளர்கள் அரசு மற்றும் பொதுமக்கள் இடையே முக்கிய இணைப்புப் பாலமாக செயல்பட்டு வருகிறார்கள். குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கும் பணியில் அங்கன்வாடி பணியாளர்கள் அர்ப்பணிப்பும் சேவையும் மிகவும் பாராட்டத்தக்கது. இன்று வழங்கப்படும் இந்த கைப்பேசிகள் உங்கள் பணிகளை மேலும் எளிதாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ள உதவும். எனவே இந்த வசதியை சிறப்பாக பயன்படுத்தி தாய் மற்றும் குழந்தைகளின் நலனை மேலும் மேம்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் 25 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களையும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் வாரிசுகளுக்கும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் வழங்கினார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















