கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!..2 நாட்கள் இலவச அனுமதி, QR முறை மாற்றம்!..
கடந்த ஜனவரி 12ஆம் தேதி முதல் ஒரு புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் ஒரே இடத்தில் QR கோடு மூலம் நுழைவு கட்டணம் வசூலிக்கும் முறை தொடங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் சுற்றுலா மையங்களில், கடந்த ஜனவரி 12ஆம் தேதி முதல் ஒரு புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் ஒரே இடத்தில் QR கோடு மூலம் நுழைவு கட்டணம் வசூலிக்கும் முறை தொடங்கப்பட்டது. ஆனால் இந்த முறை நடைமுறையில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலேயே மிக அழகான மலைவாசஸ்தலங்களில் ஒன்றான கொடைக்கானல் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 'காடுகளின் பரிசு' என்று மொழிபெயர்க்கும் ஒரு பெயருடன், இந்த இடத்தின் அமைதியும், அழகும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த அற்புதமான இடம் மூடுபனி காடுகள், மயக்கும் நிலப்பரப்புகள், அமைதியான ஏரிகள் மற்றும் இனிமையான வானிலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இயற்கையாகவே, மலைவாசஸ்தலத்தின் இந்த அம்சங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது என சொல்லலாம். கோடைகாலங்களில் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இடமாகவும் உள்ளது.
இந்த நிலையில், தற்போது கோடைக்கானலுக்கு டூர் திட்டமிடுபவர்களுக்கு இப்போதே சரியான வாய்ப்பு வந்து விட்டது. இன்று மே 2 மற்றும் மே 3 ஆகிய இரண்டு நாட்களுக்கு, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்கள் அனைத்தும் இலவசமாக திறக்கப்பட்டுள்ளன. வழக்கமாக கட்டணம் வசூலிக்கப்படும் சில பிரபல ஸ்பாட்களை இந்த இரண்டு நாட்களில் எந்த செலவில்லாமல் ரசிக்கலாம் என்பது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் சலுகையாக பார்க்கப்படுகிறது.
தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் போன்ற இடங்கள் இயற்கை அழகால் பெயர் பெற்றவை. கோடை வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் அதிகமாக தேடும் ஹில்ஸ் ஸ்டேஷன்களில் ஒன்றாக கொடைக்கானல் இருந்து வருகிறது. குளிர்ந்த காலநிலை, பசுமை நிறைந்த காடுகள், மலைகள் சூழ்ந்த காட்சிகள் ஆகியவை பயணிகளை மீண்டும் மீண்டும் இங்கு வர வைக்கும் முக்கிய காரணங்களாக உள்ளன.
இந்நிலையில், சமீப காலமாக நடைமுறைக்கு வந்த ‘க்யூஆர் கோடு’ மூலம் ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்கும் முறை சில சிக்கல்களை உருவாக்கியது. குறிப்பாக பசுமை பள்ளத்தாக்கு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் தற்காலிக தீர்வாக இரண்டு நாட்களுக்கு கட்டணத்தை முழுமையாக ரத்து செய்தது. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் எளிதாகவும் விரைவாகவும் முக்கிய இடங்களை பார்வையிட முடியும். பயணிகளின் அனுபவத்தை சீராக வைத்திருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் வசதிக்காக பேருந்து நிலையம், பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட ஐந்து இடங்களில் நேரடியாக டிக்கெட் வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே 4 முதல் புதுப்பிக்கப்பட்ட ‘க்யூஆர்’ முறை சீரமைப்புடன் மீண்டும் அமலுக்கு வரும் என அதிகாரிகள் பதிவு செய்தனர். இந்த இரண்டு நாள் சலுகையை பயன்படுத்தி, செலவு இல்லாமல் கொடைக்கானலின் இயற்கை அழகை அனுபவிக்கலாம்.
ட்ரெண்டிங் செய்திகள்




















