ரெணகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்.பழனியில் கோலாகலம்!பக்தர்கள் பக்தி பரவசம்..
நவக்கிரக ஹோமம், பூமி பூஜை, ரக்ஷாபந்தனம், சக்தி கலச பூஜை, பூர்ணாஹூதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வேள்வி நிகழ்வுகள் மங்கள இசை முழங்க பக்தி உணர்வுடன் நடைபெற்றது.
பழனி ரெணகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இக்கும்பாபிசேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ரெணகாளியம்மன் திருக்கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா மிகுந்த பக்தி மற்றும் ஆன்மீக எழுச்சியுடன் நடைபெற்றது. நகரின் பழமை வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற இந்த அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே திரண்டு வந்து அம்மனை தரிசனம் செய்தனர். கடந்த 28-ஆம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கிய இந்த கும்பாபிஷேக விழாவின் யாகசாலை பூஜைகள் மூன்று நாட்களாக சிறப்பாக நடைபெற்றன.
இதில் நவக்கிரக ஹோமம், பூமி பூஜை, ரக்ஷாபந்தனம், சக்தி கலச பூஜை, பூர்ணாஹூதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வேள்வி நிகழ்வுகள் மங்கள இசை முழங்க பக்தி உணர்வுடன் நடைபெற்றது. யாகசாலை பூஜைகளில் வேதமந்திரங்கள் ஒலித்து கோவில் வளாகம் முழுவதும் ஆன்மீக சூழ்நிலை நிலவியது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நிறைவேற்றப்பட்டது.
வேத மந்திரங்கள் உச்சரித்தபடி கலசங்களுக்கு புனித நீர் செலுத்தியதும் பக்தர்கள் “ஓம் சக்தி” என முழக்கமிட்டு பக்தி பரவசத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அருள்மிகு ரெணகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, பல்வேறு மலர்களால் அழகிய அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அம்மன் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அனைவரும் மிகுந்த பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. மொத்தத்தில் இந்த கும்பாபிஷேக விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















