மதுரை ஏவி மேம்பாலத்தில் இஸ்ரேல், இந்திய தேசியக்கொடி அச்சிட்ட பேனர்: பாஜகவினர் உட்பட 4 பேர் கைது!
”இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டி இதனை பறக்கவிட்டோம், பயங்கரவாதத்திற்கு எதிராகவும் இதனை செய்து எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்” - என தெரிவித்துள்ளனர்.
மதுரை ஏவி மேம்பாலத்தில் இஸ்ரேல் மற்றும் இந்திய தேசியக்கொடி அச்சிட்ட பேனரை பறக்க விட்ட பாஜகவினர் உட்பட 4 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்
கடந்த 7ஆம் தேதி, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. இரு தரப்பிலும் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுப்பதாகக் கூறி, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் உலகளவில் பெரும் பிரச்னையை உருவாக்கியுள்ளது.
குறிப்பாக, காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல் சர்வதேச விதிகளை மீறும் வகையில் இருப்பதாக ஐநா குற்றம் சுமத்தியுள்ளது. அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. கடந்த வாரம், காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல் உலக மக்களின் மனசாட்சியை தட்டி எழுப்பியுள்ளது. இந்த தாக்குதலில் மட்டும் கிட்டத்தட்ட 500 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இஸ்ரேல் மற்றும் இந்திய தேசியக்கொடி அச்சிட்ட பேனரை பறக்க விட்ட பாஜகவினர்
பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேல் நாட்டிற்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேலுக்கு ஒரு தரப்பும், பாலஸ்தீனத்திற்கு ஒரு தரப்பும் என தங்களது ஆதரவுகளை சமூக வலைதளங்களில் மாறி மாறி பகிர்ந்துவருகின்றனர். இந்நிலையில் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே கோவையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொடியை பறக்க விட்ட நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை மதுரை மாநகர் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள ஏவி மேம்பாலத்தில் 4 இளைஞர்கள் இஸ்ரேல் மற்றும் இந்திய தேசியக் கொடிகள் அச்சிடப்பட்டு அதில் INDIA STAND WITH ISRAEL என்ற வாசகத்துடன் இருநாடுகளும் கைகுலுக்குவது போன்ற படத்துடன் கூடிய பேனரை பாலத்தில் பறக்கவிட்டபடி கோஷம் எழுப்பினர்.
அப்போது பயங்கரவாதத்திற்கு எதிராகவும் பாரத் மாதா கி ஜே ,ஜெய்ஸ்ரீராம் , இந்தியா இந்து நாடு என்ற கோஷங்களை முழக்கமிட்டனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் 4 பேரையும் மதிச்சியம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்த சரத்குமார், கடச்சனேந்தல் பகுதியை சேர்ந்த ரகுபதி என்ற நேதாஜி, புதூரை சேர்ந்த பிரவீன்ராஜ், திடீர்நகர் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து நான்கு பேரையும் கைது செய்த மதிச்சியம் காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இருவர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
கைதானவர்கள் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்திய பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாலஸ்தீன ஆதரவாக போராட்டங்களும் கொடிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டி இதனை பறக்கவிட்டோம். பயங்கரவாதத்திற்கு எதிராகவும் இதனை செய்து எதிர்ப்பை வெளிப்படுத்தினோம். நாங்கள் எந்த அமைப்பையும் சார்ந்தவர்கள் அல்ல’’ என தெரிவித்தனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - இஸ்ரேல் காவல்துறைக்கு சீருடைகளை தயாரித்து வந்த கேரள நிறுவனம்.. பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக எடுத்த முடிவு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets