ரிஷப் பண்ட்-ஐ காப்பாற்றியவருக்கு இந்த நிலை வரலாமா? காதலியுடன் தற்கொலை!
பண்டின் உயிரை காப்பாற்றிய இளைஞர்களில் ஒருவரான ராஜத் குமார், கடந்த 9ஆம் தேதி, உத்தரப் பிரதேசம் முசாபர்நகரில் தனது காதலியுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்-இன் உயிரைக் காப்பாற்றிய 25 வயது இளைஞர் ராஜத் குமார், தனது காதலியுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராஜத் குமார். கடந்த 2022ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், உள்ளூர்வாசியான நிஷு குமாருடன் சேர்ந்து, இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை ஒரு ஆபத்தான கார் விபத்தில் இருந்து அவர் காப்பாற்றினார்.
ரிஷப் பண்ட் உயிரை காப்பாற்றிய இளைஞர்:
இதன் மூலம், நாடு முழுவதும் பிரபலமானார். டெல்லியிலிருந்து உத்தரகாண்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது ரூர்க்கி அருகே ரிஷப் பண்டின் மெர்சிடிஸ் கார் டிவைடரில் மோதி தீப்பிடித்தது.
அப்போது, அருகில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இரண்டு இளைஞர்கள், விபத்தைப் பார்த்து உதவிக்கு விரைந்தனர். தீப்பிடித்து எரிந்த வாகனத்தில் இருந்து பண்டை வெளியே இழுத்து அவசர மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தனர்.
அவர்களின் துரித நடவடிக்கை அனைவராலும் பாராட்டப்பட்டது. தனக்கு உதவியதற்காக, அவர்களுக்கு ஸ்கூட்டர்களை பாராட்டி பரிசாக வழங்கினார் பண்ட். விபத்தில் இருந்து குணமடைந்த பண்ட், அடுத்த ஆண்டே கிரிக்கெட்டுக்குத் திரும்பி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
நடந்தது என்ன?
இந்த நிலையில், பண்டின் உயிரை காப்பாற்றிய இளைஞர்களில் ஒருவரான ராஜத் குமார், கடந்த 9ஆம் தேதி, உத்தரப் பிரதேசம் முசாபர்நகரில் தனது காதலியுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ராஜத் குமாரும் மனு காஷ்யப் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களது காதலை அவர்களது குடும்பத்தினர் எதிர்த்ததால் இருவரும் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. ராஜத் குமாரின் காதலி காஷ்யப்-க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காத நிலையில், அவர் உயிரிழந்தார். ராஜத் குமார் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
சாதி வேறுபாடு காரணமாக இவர்களது காதலை ஏற்க மறுத்து அவர்களது குடும்பத்தினர் வேறு இடத்தில் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். காதலை ஏற்க மறுத்த காரணத்தால், இருவரும் தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது.
மனநல பிரச்னைகளை மருந்து மற்றும் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இதற்காக நீங்கள் ஒரு மனநல மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும். மேலும் இந்த உதவி எண்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
- சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 24640050 (24 மணிநேர சேவை)

