US Indian Immigrants: 3வது பேட்ச்சை அனுப்பிய அமெரிக்கா..! மொத்தம் 112 இந்தியர்கள், குஜராத்திகள் இத்தனை பேரா?
US Indian Immigrants: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக நாடு கடத்தப்பட்ட மேலும், 112 இந்தியர்கள் தாயகம் வந்தடைந்தனர்.

US Indian Immigrants: அமெரிக்காவில் இருந்து மூன்றாவது பேட்ச்சாக மேலும், 112 இந்தியர்கள் தாயகம் அனுப்பப்பட்டுள்ளனர்.
தாயகம் வந்த 112 இந்தியர்கள்:
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை அந்நாட்டு அரசு அதிரடியாக வெளியேற்றி வருகிறது. அதன்படி, ஏற்கனவே இரண்டு குழுக்கள் ராணுவ விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு சுமார் 10 மணியளவில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிற்கு, அமெரிக்க விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானம் வந்தடைந்தனர். அதில் 112 இந்தியர்கள் தாயகம் வந்தடைந்தனர். கடந்த 10 நாட்களில் இந்தியா வந்த மூன்றாவது குழு இதுவாகும்.
மாநில வாரியான விவரங்கள்:
நாடு கடத்தப்பட்டவர்களில் 31 பேர் பஞ்சாபிலிருந்தும், 44 பேர் ஹரியானாவிலிருந்தும், 33 பேர் குஜராத்திலிருந்தும், இரண்டு பேர் உத்தரபிரதேசத்திலிருந்தும், தலா ஒருவர் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்டிலிருந்தும் வந்துள்ளனர். இந்த புதிய குழுவில் 19 பெண்கள் மற்றும் 14 சிறார்களும் உள்ளனர். மேலும், இதில் இரண்டு கைக்குழந்தைகளும் அடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
#WATCH | Punjab: Aircraft carrying the third batch of illegal Indian immigrants lands in Amritsar as it arrives from the US. pic.twitter.com/siuyMUTbMP
— ANI (@ANI) February 16, 2025
தொடரும் சோகம்:
நாடு கடத்தப்படும் இந்தியர்களின் கை மற்றும் கால்களில் விலங்குகள் பூட்டப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் இந்த சர்ச்சை வெடித்தது. ஆனால், இரண்டாவது குழுவிலும் ஆண்களுக்கு கை விலங்கு பூட்டப்பட்டு, சங்கிலியில் கட்டப்பட்டு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பெண்கள் கைவிலங்கிடப்படவில்லை அல்லது சங்கிலியால் பிணைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
போக்குவரத்து ஏற்பாடுகள்:
குடியேற்றம், சரிபார்ப்பு மற்றும் பின்னணி சோதனைகள் உள்ளிட்ட அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்த பிறகு நாடுகடத்தப்பட்டவர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். நாடுகடத்தப்பட்டவர்களை அந்தந்த இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுவார்கள், ஹரியானா அரசும் தங்கள் மாநிலத்தவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு கொண்டு செல்ல இரண்டு பேருந்துகளை அனுப்பியுள்ளது.
குஜராத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர்?
பிப்ரவரி 5 ஆம் தேதி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் அமிர்தசரஸிற்கு அழைத்து வரப்பட்டனர். அதில் தலா 33 பேர் ஹரியானா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், 30 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்களாவர்.
இரண்டாவது கட்டமாக சனிக்கிழமை நள்ளிரவு அமிர்தசரஸ் வந்தடைந்த இரண்டாவது ராணுவ விமானத்தில், மொத்தம் 119 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 67 பேர் பஞ்சாப், 33 பேர் ஹரியானா, 8 பேர் குஜராத், மூன்று பேர் உத்தரபிரதேசம், தலா இருவர் கோவா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் தலா ஒருவர் இமாச்சலபிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர்.
அந்நாட்டில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இந்தியர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

