எதிரிகளுக்கு எச்சரிக்கை.! பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு தாராள நிதி; வலுவடையும் ராணுவம்
இந்தியாவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் அச்சுறுத்தல்கள் நிலவி வரும் சூழலில், மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்தியாவிற்கு, ஏற்கனவே பாகிஸ்தானுடன் மோதல் ஏற்பட்ட நிலையில், இன்னும் சில நாடுகளாலும் அச்சுறுத்தல் உள்ளது. இந்த நிலையில், அதனை மனதில் கொண்டு, இந்த பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு கடந்த முறையைவிட பல மடங்கு அதிக நிதி ஒதுக்கி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மாறிவரும் பாதுகாப்பு சூழல் - உலகம் முதல் அண்டை நாடு வரை
உலக அளவில் தற்போது மிகப் பெரும் போர் சூழல்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக, மத்திய கிழக்கில் எந்த நேரமும் அலெர்ட் மோடிலேயே இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அதேபோல், ரஷ்யா-உக்ரைன் போர், காசா போர் போன்றவற்றோடு, ஈரானை அமெரிக்கா தாக்கும் சூழலும் உருவாகி வருகிறது.
இதேபோல், இந்தியாவை பொறுத்தவரை, ஏற்கனவே பாகிஸ்தான் தீவிரவாதிகளால், இரு நாடுகளுக்கும் இடையே 3 நாட்கள் மோதல் ஏற்பட்டு ஓய்ந்தது. இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் பின்வாங்கியது. ஆனாலும், தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவி வருகிறது.
மறுபுறம், வங்கதேசமும் தற்போது இந்தியாவை சீண்டி வருகிறது. நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்த நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரத்தால், நிலைமை மாறி விட்டது. இதையடுத்து, வடகிழக்கு மாநிலங்களில் குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் வங்கதேசம் செயல்பட்டு வருகிறது.
மற்றொரு அச்சுறுத்தல் சீனா என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஏற்கனவே, லடாக், அருணாச்சல பிரதேச பகுதிகளுக்கு அந்நாடும் உரிமை கோரி வருகிறது. எனினும், தற்போது இந்தியா உடன் சீனா நட்பாக இருக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனாலும், இந்த நாடுகளால் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதே உண்மை. அதோடு, உலக அளவிலும் பல்வேறு போர் சூழல்கள் நிலவுவதால், இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் எத்தகைய அச்சுறுத்தலையும் சமாளிக்கும் வல்லமையை பெற்றிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையை பலப்படுத்தும் வகையில் நிதி ஒதுக்கீடு
இப்படிப்பட்ட சூழலில், பாதுகாப்புத் துறையை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தை உத்தேசித்தே, தற்போது தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், 7.85 லட்சம் கோடி ரூபாய் நிதியை அத்துறைக்கு ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. இதன் மூலம், பாதுகாப்புத்துறை முன்பைவிட இன்னும் வலுவாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
இதில், பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்க 2.19 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். ரஃபேல் போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்களுக்கான ஒப்பந்தங்கள் போன்ற முக்கிய திட்டங்களை பாதுகாப்பு அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
மேலும், பாதுகாப்புத் துறையில் இறக்குமதி செய்யப்படும் போர் விமான உதிரி பாகங்களுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, பாதுகாப்புத்துறை தற்சார்பு நிலையை அடையவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் இந்த பட்ஜெட் வழிவகுக்கும் என்றும் நிதியமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.























