தூத்துக்குடிக்கு ரயில் சேவை: ஹைதராபாத் பயணிகள் குஷி! நிரந்தர ரயிலாக மாறியது, முழு விபரம் இதோ!
ஹைதராபாத் மற்றும் மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயிலைத் தூத்துக்குடி வரை நீட்டித்து, அதனை நிரந்தர ரயிலாக மாற்ற இந்திய ரயில்வே வாரியம் முறைப்படி ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம்.

குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். ரயில் செல்லும் பயணிகளுக்கு ஏற்றவாறு குறிப்பாக விடுமுறை தினங்கள், திருவிழாக்கால நேரங்களில் ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது செய்து வருகிறது.
இந்த நிலையில், ஹைதராபாத் (காச்சிகுடா) மற்றும் மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயிலைத் தூத்துக்குடி வரை நீட்டித்து, அதனை நிரந்தர ரயிலாக மாற்ற இந்திய ரயில்வே வாரியம் முறைப்படி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.
கொரோனா காலத்திற்கு முன்பிருந்தே காச்சிகுடா-மதுரை இடையே திருவண்ணாமலை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. எனினும், இந்த ரயில் நிரந்தரமாக்கப்படாமல் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து நிரந்தர சேவையாக மாற்ற ஒப்புதல் கிடைத்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரயில் பயண விவரம் (வண்டி எண்: 17615/17616): திங்கள்கிழமை இரவு காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு, புதன்கிழமை காலை தூத்துக்குடியைச் சென்றடையும். மீண்டும் புதன்கிழமை காலை தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, வியாழக்கிழமை மதியம் காச்சிகுடாவைச் சென்றடையும்.
முக்கிய நிறுத்தங்களாக கர்னூல் சிட்டி, அனந்தபூர், திருப்பதி (பகாலா), காட்பாடி, வேலூர் கேன்ட், திருவண்ணாமலை, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் மற்றும் மதுரை வழியாக இந்த ரயில் இயக்கப்படும்.
தூத்துக்குடியில் இருந்து ஹைதராபாத் செல்வதற்கு முதன்முறையாக நேரடி ரயில் சேவை கிடைத்துள்ளது. இதன் மூலம் மதுரை, தஞ்சாவூர், திருவண்ணாமலை மற்றும் திருப்பதி போன்ற ஆன்மிகத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்களுக்குப் பெரும் வசதி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஹைதராபாத்திலிருந்து திருச்செந்தூர் வரும் பக்தர்கள் இந்த ரயிலைப் பயன்படுத்தி தூத்துக்குடி வரை வர முடியும்.
தற்போது காச்சிகுடா-மதுரை சிறப்பு ரயில் சேவை மார்ச் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்தச் சேவை முடிந்த பிறகு, வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த ரயில் தூத்துக்குடி வரை நிரந்தர ரயிலாக இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிரந்தர ரயிலாக மாற்றப்படுவதால், இனி பயணிகள் 60 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி கிடைக்கும்.























