சுங்கச்சாவடி கழிப்பறை சுத்தம் இல்லையா? ₹1000 இலவசம்! ஃபாஸ்டேக் பயனர்களுக்கு சூப்பர் சலுகை!
பயணிகள் இந்த சலுகையை பெறுவதற்கு Rajmargyatra என்ற செயலியை தங்களுடைய போனில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் நாம் பயணம் செய்யும் போது அந்த சாலைகளை மேலாண்மை செய்யக்கூடிய நிறுவனத்திற்கு சுங்க கட்டணம் செலுத்துகிறோம். தற்போது சுங்க கட்டணம் செலுத்தும் முறை பெருமளவில் மாறிவிட்டது.

ஃபாஸ்டேக் முறையில் நம்முடைய வாகனத்தில் ஃபாஸ்டேக் ஒட்டப்பட்டிருக்கும், அது நம்முடைய வங்கிக் கணக்கோடு wallet முறையில் இணைக்கப்பட்டிருக்கும். சுங்க சாவடிகளை கடக்கும் போது தானாகவே அந்த ஃபாஸ்டேக் ஸ்கேன் செய்யப்பட்டு அதிலிருந்து பணம் என்பது எடுத்துக் கொள்ளப்படும். சுங்கச்சாவடிகளை நாம் கடக்கும் போது அங்கே இருக்கும் கழிப்பறைகளை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் பல்வேறு இடங்களிலும் இந்த கழிப்பறைகள் தூய்மையாக இருப்பதில்லை , அசுத்தமாகவே காணப்படுகின்றன. சுங்க கட்டணம் வசூல் செய்யும் நிறுவனங்கள் கழிப்பறைகளை முறையாக பராமரிக்கப்படுவதில்லை இதற்கு எதற்கு நாங்கள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என ஏராளமான வாகன ஓட்டிகளும் பயணிகளும் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் தான் மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதன்படி தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் மக்களின் வசதியை மேம்படுத்தும் நோக்கத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் clean toilet picture india challenge என்ற திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் சுங்கச்சாவடிகளில் கழிப்பறைகள் சுத்தமில்லாமல் இருப்பது அறிந்தால் அதனை புகைப்படமாக எடுத்து அனுப்ப வேண்டும் இவ்வாறு நீங்கள் அசுத்தமான கழிப்பறைகளை எடுத்து புகைப்படம் அனுப்பும்போது உங்களுடைய ஃபாஸ்டேக் கணக்கில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 1000 ரூபாய் ரீசார்ஜ் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு சுமார் 300க்கும் அதிகமானவர்கள் 1000 ரூபாய் இலவச ரீசாஜ் பெற்றனர். இந்த ஆண்டும் ஜூன் மாதம் வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. பயணிகள் இந்த சலுகையை பெறுவதற்கு Rajmargyatra என்ற செயலியை தங்களுடைய போனில் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.

அசுத்தமான சுங்கசாவடி கழிப்பறையை தெளிவாக படம் எடுத்து இந்த ஆப்பில் உள்ள ஜியோ டேக் செய்யப்பட்ட தகவலோடு பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனை அடுத்து உங்களுடைய பெயர் ,இடம், வாகன பதிவு எண், மொபைல் எண் ஆகிய விவரங்களையும் உள்ளிட வேண்டும். ஒரே கழிப்பறை குறித்து பலர் புகார் அளித்தாலும் முதலில் யார் புகார் அளித்தாரோ அவருக்கு தான் இந்த 1000 ரூபாய் ரீசார்ஜ் கிடைக்கும் . போலியான மற்றும் பழைய புகைப்படங்கள் ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.இந்த புகைப்படங்கள் தொழில்நுட்பங்கள் மற்றும் அதிகாரிகள் மூலம் சரிபார்க்கப்படும். உண்மையாகவே அந்த கழிப்பறைகள் இப்படி அசுத்தமாக தான் இருக்கின்றதா என்பதை ஆய்வு செய்யப்பட்ட பிறகு 1000 ரூபாய் சன்மானம் என்பது வழங்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் வரக்கூடிய சுங்கச்சாவடி கழிப்பறைகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.






















