சபரிமலை தங்கம் கொள்ளை: இறுதி அறிக்கை மார்ச் 31-க்குள்! சி.பி.எம் தொடர்பு, நடிகர் ஜெயராம் விசாரணை!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலை தங்கம் மற்றும் கருவறை வாசல் நிலை தங்கம் கொள்ளை தொடர்பான வழக்கு குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஏ.பத்மகுமார் ஆளும் சி.பி.எம் கட்சியில் நேரடியாக பதவியில் இருந்தபோதே கைது செய்யப்பட்டார். விஜயகுமாரும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்தவர். கே.பி.சங்கரதாஸ் சி.பி.ஐ கட்சியை சேர்ந்தவராவார். சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறை மேற்கூரை, துவார பாலகர்கள் உள்ளிட்ட சிற்பங்களில் தங்கத் தகடு பதிக்க தொழிலதிபர் விஜய் மல்லையா 1998-ம் ஆண்டு சுமார் 30 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கியிருந்தார். இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் துவார பாலகர்கள் சிலையில் உள்ள செம்புத் தகடுகள் மீது தங்கம் பதிக்கும் திருப்பணிக்கு உபயம் வழங்கியதாக கணக்கு காட்டப்பட்டிருந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு அமைத்தது உயர் நீதிமன்றம். கருவறையின் முன்பகுதியில் உள்ள துவார பாலகர்கள் சிலைகளின் செம்பு கவசங்கள் மீது பதியப்பட்ட தங்கம் மற்றும் கருவறை திருநடையில் பதிக்கப்பட்ட தங்கத்தகடுகள் ஆகியவற்றை கொள்ளையடிக்கப்பட்டதாக சிறப்பு விசாரணைக்குழு கண்டுபிடித்து தனித்தனியாக 2 வழக்குகள் பதியப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கேரள பிரபல நடிகர் ஜெயராம் உட்பட பல்வேறு தரப்பினரிடையே தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், சபரிமலை கோயிலில் தங்கம் திருடு போன வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கை மார்ச் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்படும் என்று சிறப்பு புலனாய்வுக் குழு கேரள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலை தங்கம் மற்றும் கருவறை வாசல் நிலை தங்கம் கொள்ளை தொடர்பான வழக்கு குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு தீவிரமாக விசாரணை செய்து வரும் நிலையில், இந்த வழக்கானது உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கம் திருட்டு வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக சிறப்புப் புலனாய்வுக் குழு சேகரித்த 36 மாதிரிகள், கொல்லம் விசாரணை ஆணையர் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அவற்றை அறிவியல்பூர்வ சோதனைக்காக ஜாம்ஷெட்பூரில் உள்ள தேசிய உலோகவியல் ஆய்வகத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், அவற்றை கட்டணமின்றி பகுப்பாய்வு செய்து தருவதாக தேசிய உலோகவியல் ஆய்வகம் உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து விசாரணை இறுதி அறிக்கை மார்ச் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்படும் என்று கூறினார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட சில நபர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் தொலைபேசி தொடர்புகள் குறித்து செல்போன் சேவை வழங்குநர்களிடமிருந்து அழைப்பு தரவு பதிவுகளைப் பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் சிறப்பு விசாரணைக் குழு தரப்பில் முறையிடப்பட்டது. இதனையேற்றுக் கொண்ட நீதிபதிகள், சபரிமலை கோயிலில் சேகரித்த மாதிரிகளை தேசிய உலோகவியல் ஆய்வகத்திற்கு அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.






















