![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Jammu Kashmir Attack: காஷ்மீரில் கொல்லப்பட்ட அப்பாவிகள்! குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
விசாரணை செய்வதற்காக அழைத்து செல்லப்பட்ட அப்பாவி பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்களில் 3 பேர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
![Jammu Kashmir Attack: காஷ்மீரில் கொல்லப்பட்ட அப்பாவிகள்! குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்! Rajnath Singh Meets Families Of 3 Civilians Killed After Jammu Kashmir Attack Jammu Kashmir Attack: காஷ்மீரில் கொல்லப்பட்ட அப்பாவிகள்! குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/27/c4a147ca6694bccb20ebe4e5e5da12651703685519626572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பழங்குடியினர் மர்ம மரணம்:
கடந்த 25ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக பழங்குடியின குஜ்ஜர் பக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்த 8 பேரை ராணுவத்தினர் அழைத்து சென்றனர்.
ஆனால், ராணுவ வீரர்களின் உயிரிழப்புக்கு காரணமான பயங்கரவாதிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையே, விசாரணை செய்வதற்காக அழைத்து செல்லப்பட்ட அப்பாவி பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர்களில் 3 பேர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். உயிரிழந்தது, முகமது சபீர், ஷபீர் அகமது மற்றும் ஷோகத் ஹுசைன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், ராணுவ முகாமில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு:
அதில், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்கள் மீது ராணுவ வீரர்கள் என்று நம்பப்படும் சில நபர்கள், மிளகாய் தூள், தூவுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ, இறப்பதற்கு முன்பு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ, பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. பழங்குடியினரின் மர்ம மரணம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை அடையாளம் தெரியாத நபர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்தது.
இந்திய தண்டனைச் சட்டப் (ஐபிசி) பிரிவு 302ன் கீழ் பூஞ்ச் சூரன்கோட் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து பெரும் அழுத்தம் வந்ததை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களை நேரில் சந்தித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து, காயம் அடைந்த பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார் ராஜ்நாத் சிங்.
”போர்களை வெல்வோம்; பயங்கரவாதத்தை ஒழிப்போம்”
முன்னதாக, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், "நீங்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, மக்களின் மனதை வெல்லும் பொறுப்பும் உங்களுக்கு இருக்கிறது. நாட்டின் குடிமக்களை எந்த நேரத்திலும் புண்படுத்தக் கூடாது.
ராணுவத்தினர் மக்களுடன் நெருங்கிய உறவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். எத்தனை போரிலும் ராணுவத்தினர் ஈடுபட்டு, வெற்றியடையும் திறன் நம்மிடம் உள்ளது. நாட்டை பாதுகாக்கும் பொறுப்பை தாண்டி, மக்களின் மனங்களை வெல்ல வேண்டியது மிகப்பெரிய பொறுப்பு உள்ளது.
இதுபோன்ற தாக்குதல்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். அதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய முடியாது. அரசு உங்களுடன் உள்ளது. உங்கள் நலன் மற்றும் பாதுகாப்பு அரசின் முன்னுரிமையாக உள்ளது. போர்களை வெல்வோம் பயங்கரவாதத்தை ஒழிப்போம்" என்று ராணுவ வீரர்கள் மத்தியில் பேசினார் ராஜ்நாத் சிங்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)