சிறையில் முளைத்த காதல்.. ஆயுள் தண்டனை ஜோடி திருமணம் செய்ய பரோல்.. கிளம்பிய எதிர்ப்பு!
ஹனுமன் பிரசாத்தும், பிரியா சேத்தும் சிறையில் இருந்தபோது சந்தித்து தங்கள் நட்பை வளர்க்க தொடங்கினர். நாளடைவில் இது காதலாக மாறியது. தற்போது திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

ராஜஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் காதலித்து திருமணம் செய்ய உள்ளனர். அவருக்கு சிறை நிர்வாகம் 15 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது. இந்த குற்றவாளி மணமக்கள் இருவரும் நாடு முழுவதும் மிகவும் பரீட்சையமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்க தகவலாகும்.
இளைஞர் கொலை
கடந்த 2018ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒரு கொலை சம்பவம் மிகப்பெரிய அளவில் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. டேட்டிங் செயலியான டிண்டர் மூலம் பழகி நேரில் சந்திக்க சென்ற இளைஞனை, பெண் ஒருவர் தனது இரு ஆண் நண்பர்களுடன் இணைந்து கொலை செய்தார். துஷ்யந்த் அந்த இளைஞரை பணய கைதியாக வைத்து பணம் பறிக்க பிரியா சேத், திஷ்காந்த் கம்ரா மற்றும் லக்ஷ்ய வாலியா ஆகிய 3 பேரும் திட்டமிட்டனர்.
ஆனால் துஷ்யந்த் குடும்பத்தினர் பணம் தர மறுத்ததால் அவரை 3 பேரும் சேர்ந்து கத்தியால் குத்தியால், தலையணை கொண்டு மூச்சுத்திணறலை ஏற்படுத்தியும் கொடூரமாக கொன்றனர். இந்த சம்பவத்தில் பிரியா சேத், திஷ்காந்த் கம்ரா மற்றும் லக்ஷ்ய வாலியா ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது. இவர்கள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது ராஜஸ்தானின் திறந்தவெளி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
#WATCH | Alwar, Rajasthan: Chandrakala, mother of the convict groom, says, "Weddings feel good. It is good that the wedding is taking place...The bride is from Jaipur." https://t.co/VA2vVnbmuf pic.twitter.com/0j6C2MDmUq
— ANI (@ANI) January 23, 2026
இதே சிறையில் 2017 ஆம் ஆண்டு தகாத உறவு விஷயத்தில் காதலிக்காக அவரது கணவர், மூன்று குழந்தைகள், மருமகனை கொன்ற வழக்கில் 29 வயதான ஹனுமான் பிரசாத் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
சிறையில் முளைத்த காதல்
இதனிடையே ஹனுமன் பிரசாத்தும், பிரியா சேத்தும் சிறையில் இருந்தபோது சந்தித்து தங்கள் நட்பை வளர்க்க தொடங்கினர். நாளடைவில் இது காதலாக மாறியது. தற்போது திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்துள்ளனர். ஹனுமன் பிரசாத்தின் சொந்த ஊரான ஆல்வார் மாவட்டத்தில் உள்ள பரோடாமியோவில் தான் இந்த திருமணம் நடைபெறவுள்ளது. ராஜஸ்தானில் உள்ள சங்கனேர் திறந்தவெளி சிறையில் இருக்கும் இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட பரோல் ஆலோசனைக் குழு இந்த தம்பதியினருக்கு விதிகளின்படி 15 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது.
ஆனால் பிரியா சேத்துக்கு பரோல் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக மேல்முறையீடு செய்யப்படும் என துஷ்யந்த் சர்மா வழக்கின் வழக்கறிஞர் சந்தீப் லோஹாரியா தெரிவித்துள்ளார். திருமணம் அதன் அசாதாரண சூழ்நிலைகளால் கவனத்தை ஈர்த்திருக்கும் நிலையில் பரோல் வழங்குவதில் உரிய நடைமுறை பின்பற்றப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.























