மனைவி மீது எழுந்த சந்தேகம்.. 3 வயது குழந்தையின் கழுத்தை அறுத்து போட்ட ஐடி ஊழியர்.. கொடூரம்!
மனைவி மீது சந்தேகம் எழுந்த நிலையில், அந்த கோபத்தில் தனது 3 வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் ஐடி ஊழியர். இந்த சம்பவம் புனேவில் நடந்துள்ளது.

திருமணம் மீறிய உறவில் ஈடுபட்டதாக தனது மனைவி மீது சந்தேகம் எழுந்த நிலையில், அந்த கோபத்தில் தனது 3 வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் ஐடி ஊழியர். இந்த சம்பவம் புனேவில் நடந்துள்ளது. குடிபோதையில் இந்த கொடூரத்தை செய்துவிட்டு, குழந்தையின் உடலை காட்டில் தூக்கி போட்டுள்ளார் அந்த நபர்.
குடிபோதையில் குழந்தையின் கழுத்தை அறுத்து கொடூர தந்தை:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் மாதவ் டிகேதி. இவரது மனைவி ஸ்வரூபா. இவர்களுக்கு 3 வயதில் ஹிம்மத் மாதவ் என்ற ஒரே ஆண் குழந்தைதான் உள்ளது. இவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசித்து வருகின்றனர்.
ஸ்வரூபாவுக்கு இன்னொருவருடன் தொடர்பு இருப்பதாக மாதவ்க்கு சந்தேகம் வந்துள்ளது. நேற்று முன்தினம் மதியம் கணவன், மனைவிக்கு இடையே சண்டை வெடித்தது. கோபத்தில் இருந்த மாதவ், தனது குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். முதலில் பாரில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர், மதியம் 12:30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அங்கிருந்து, அவர் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்று, பின்னர் சந்தன் நகர் அருகே உள்ள ஒரு காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளார்.
கணவன், மகனிடம் இருந்து எந்த தகவலும் வராத நிலையில், ஸ்வரூபாவுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இரவு வெகுநேரமாகியும், தனது கணவரும் மகனும் காணவில்லை என்று சந்தன் நகர் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார்.
சிசிடிவியில் பரபரப்பு தகவல்கள்:
போலீசார் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். அதில், முக்கியமான தகவல்கள் தெரியவந்தன. மாதவ் கடைசியாக வியாழக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு தனது குழந்தையுடன் காணப்பட்டார். ஆனால், அதற்கு பிறகு கிடைத்த சிசிடிவி காட்சியில் அவர் குழந்தை அவரிடம் இல்லை.
மாதவின் மொபைல் போன் மூலம் அவரது இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். லாட்ஜில் குடிபோதையில் அவரை காவல்துறை பிடித்துள்ளது. சுயநினைவு திரும்பிய பிறகு, மாதவ் தனது மகனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அருகிலுள்ள ஒரு காட்டில் குற்றம் நடந்த இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு சிறுவனின் உடல் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டனர். இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், "விசாரணையில், குழந்தையின் தந்தை ஒரு விடுதியில் குடிபோதையில் இருப்பது கண்டறியப்பட்டது.
நாங்கள் அவரைக் காவலில் எடுத்து அவரைக் கைது செய்தோம். மேலும் விசாரித்ததில், அவர் தனது மகனைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் எடுக்கப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது. கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

