Assembly Elections: வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசிநாள்..! 3 மாநிலங்களில் அனல்பறக்கும் அரசியல் களம்!
Assembly Election 2026: கேரளம், அசாம் மற்றும் பாண்டிச்சேரியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும்.

Assembly Election 2026: தமிழ்நாடு மட்டுமின்றி மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடக்கிறது. இதில், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு தவிர மற்ற 3 மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இன்றே கடைசி நாள்:
இந்த 3 மாநிலங்களிலும் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். இந்த 3 மாநிலங்களிலும் வேட்புமனுத் தாக்கல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே தொடங்கியது. கடந்த 16ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கப்பட்ட நிலையில், இன்று கடைசி நாள் ஆகும்.
இதனால், இந்த 3 மாநிலங்களிலும் வேட்புமனுத் தாக்கல் இதுவரை செய்யாத வேட்பாளர்கள் இன்று செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசாம் மாநிலத்தில் 126 சட்டமன்ற தொகுதிகளும், கேரளாவில் 140 சட்டமன்ற தொகுதிகளும், பாண்டிச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளது.
ஒரே கட்டத் தேர்தல்:
அசாம் மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் போட்டி நிலவி வருகிறது. கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. பாண்டிச்சேரியில் காங்கிரஸ் - திமுக தலைமையிலான கூட்டணிக்கும், என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கும், தவெக-விற்கும் இடையே போட்டி நிலவுகிறது.
இந்த 3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இன்று மாலையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெறும் நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடக்கிறது. இதில் தகுதியில்லாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 26ம் தேதி கடைசி நாள் ஆகும்.
பாண்டிச்சேரி இதில் யூனியன் பிரதேசமாக இருந்தாலும் இங்கு தமிழ்நாட்டின் அறிமுக கட்சியான தவெக முதன்முறையாக களமிறங்குகிறது. அசாமில் ஆட்சியைத் தக்கவைக்க போராடும் பாஜக, கேரளாவில் தங்களது அஸ்திவாரத்தை ஆழமாக இந்த தேர்தலில் நிலைநாட்ட தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், கேரளாவில் பறிபோன ஆட்சியை மீண்டும் பிடிக்க கேரள காங்கிரஸ் மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. கேரளாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க மார்க்சிஸ்ட் கட்சி மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
தேர்தல் பணிகள் தீவிரம்:
இந்த 3 மாநிலங்களிலும் தேர்தல் பரப்புரைகள் அனல்பறக்கத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 9ம் தேதி இந்த 3 மாநிலங்களிலும் நடைபெறும் வாக்குப்பதிவிற்கான முடிவு மே 4ம் தேதி நடக்கும். தேர்தல் பணிகளுக்காக இந்த 3 மாநிலங்களிலும் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும், தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் இடங்கள், தேர்தல் நடத்துவதற்கான சாதனங்கள் ஆகியவை மிகவும் தீவிரமாக தயார்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் அலுவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.























