PM Modi: "பத்து ரூபாய் கொடுக்கணும்ல?" - கடைக்காரரிடம் கேட்டு காரப்பொறி சாப்பிட்ட பிரதமர் மோடி
பிரதமர், மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற 'ஜால்முரி'(காரப்பொறி) என்ற பாரம்பரிய உணவை விரும்பி வாங்கிச் சாப்பிட்டார். இந்த எதார்த்தமான செயல் அங்கிருந்த பொதுமக்களையும் தொண்டர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்து வரும் பாஜக தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடி, பாரம்பரிய பெங்காலி உணவைச் சுவைத்த புகைப்படங்களை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
மேற்கு வங்க பாரம்பரிய உணவை சுவைத்த பிரதமர்
ஜார்கிராமில் தனது தேர்தல் உரையை முடித்துவிட்டு ஹெலிபேட் மைதானத்திற்குச் சென்று கொண்டிருந்த பிரதமர் மோடி, காலேஜ் ரோடு பகுதியில் தனது வாகனத்தை திடீரென நிறுத்தச் சொன்னார். அங்கு சாலையோரத்தில் இருந்த ஒரு சிறிய கடையில் இறங்கிய பிரதமர், மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற 'ஜால்முரி'(காரப்பொறி) என்ற பாரம்பரிய உணவை விரும்பி வாங்கிச் சாப்பிட்டார். இந்த எதார்த்தமான செயல் அங்கிருந்த பொதுமக்களையும் தொண்டர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.
சமூக வலைதளங்களில் வைரலான புகைப்படங்கள்
தான் ஜால்முரி சாப்பிடும் புகைப்படங்களைப் பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மேற்கு வங்கத்தில் நான்கு பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற களைப்பிற்கு இடையே, இந்தச் சுவையான உணவு தனக்கு ஊக்கமளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, அந்த உணவிற்காக கடைக்காரரிடம் பிரதமர் 10 ரூபாய் வழங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அங்கிருந்த பொதுமக்களுடன் இயல்பாக உரையாடிய பிரதமர், அவர்களுக்கு ஜால்முரியைப் பகிர்ந்து கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ব্যস্ত রবিবারে পশ্চিমবঙ্গ জুড়ে চারটি জনসভার ফাঁকে, ঝাড়গ্রামে সুস্বাদু ঝালমুড়ি খেলাম। pic.twitter.com/VqIrc0zrmR
— Narendra Modi (@narendramodi) April 19, 2026
வங்காளத்தின் அடையாளம் குறித்த எச்சரிக்கை
அதற்கு முன்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதே இந்தத் தேர்தலின் முக்கிய நோக்கம் என்று வலியுறுத்தினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மாநிலத்தின் அடையாளத்தையே சிதைக்கும் வகையில் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவான போக்கை மம்தா பானர்ஜி அரசு கடைப்பிடிப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், இது மாநிலத்தின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் என்று கவலை தெரிவித்தார்.
மக்களும் மாற்றத்திற்கான தீர்மானமும்
மேற்கு வங்கத்தில் உள்ள ஒவ்வொரு சமூகமும் தற்போது விழிப்புணர்வு பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், மாநிலத்தின் நலனை விட ஊடுருவல்காரர்களின் நலனில் அக்கறை காட்டும் அரசாங்கத்தை மக்கள் நிராகரிக்கத் தயாராகிவிட்டதாகத் தெரிவித்தார். வங்காள மண்ணின் மைந்தர்களுக்கு எதிராகச் செயல்படும் சக்திகளை அப்புறப்படுத்த மக்கள் உறுதிமொழி எடுத்துள்ளதாகவும், இந்த முறை பாஜகவிற்குப் பெரும் ஆதரவு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















