2023 ஆம் ஆண்டு பிறந்ததை முன்னிட்டு பொதுமக்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
கடந்த 2020, 2021 ஆண்டுகள் கொரோனா பாதிப்பால் மக்களுக்கு மிகப்பெரிய இன்னல்களை கொடுத்த நிலையில், 2022 ஆம் ஆண்டு பெரிய அளவில் பாதிப்பில்லாமல் மக்கள் மீண்டு வரும் அளவுக்கு சிறந்த ஆண்டாக அமைந்தது. இதனிடையே 2023 ஆம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. புத்தாண்டுக்கு உலகம் முழுவதும் ஒரே தேதி முறை பயன்படுத்தப்பட்டாலும், புவியின் சுழற்சி காரணமாக உலக நாடுகளின் காலநிலை மற்றும் அங்குள்ள நேரமுறை ஆகியவை காரணமாக ஒவ்வொரு நாட்டின் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு அது மாறுபடும்.
அந்த வகையில் உலகின் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2023 புத்தாண்டு பிறந்தது. இந்தியாவிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைக்கட்டியது. சாலைகள், கடற்கரைகள், கேளிக்கை விடுதிகள் என மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து தங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டதோடு, ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம் வழிபாட்டு தலங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்நிலையில் பொதுமக்களுக்கு அரசியல் தலைவர்கள் தங்கள் புத்தாண்டு வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்துள்ளனர்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட ட்வீட்டில், உள்நாடு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023 ஆம் ஆண்டு நம் வாழ்வில் புதிய உத்வேகங்கள், இலக்குகள் மற்றும் சாதனைகளைக் கொண்டு வரட்டும். தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக நம்மை மீண்டும் அர்ப்பணிக்க உறுதி ஏற்போம் என தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டை சிறப்பாக கொண்டாடுங்கள்! இந்தாண்டு நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் வெற்றிகள் நிறைந்ததாக இருக்கட்டும். அனைவருக்கும் அற்புதமான ஆரோக்கியம் கிடைக்கட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டில், உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023 இல் வீறுநடை போடுவோம்! புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக! என கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, புலரும் புத்தாண்டு,நிறைந்த நம்பிக்கை,வளம்,ஆரோக்கியம், மிகுந்த சந்தோஷம்,வெற்றி இவை அனைத்தையும் மக்களுக்கு வழங்கட்டும் என எல்லாம் வல்ல இறைவனை மனதார வேண்டி கேட்டு கொள்கிறேன் என தனது புத்தாண்டு வாழ்த்துகளை கூறியுள்ளார்.
ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட ட்வீட்டில், மலரும் புத்தாண்டில் அன்பும் அமைதியும் நிலைத்து அகத்தை சூழ்ந்திருக்கும் தீய எண்ணங்கள் நீங்கி, அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் இறைவனின் அருளோடு நீங்காத வளமும் நிறைவான நலமும் பெற்று உற்சாகமாக வாழ என தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்து செய்தியில், நோக்கங்கள் உன்னதமாக இருக்கும்போது, நம் இதயம் சுத்தமாக இருக்கும்போது, நாம் இலகுவாக பயணிக்கும்போது, பின்னால் அல்லாமல் முன்னோக்கி செல்லும் பாதையைப் பார்க்கும்போது, நாம் ஒரு பெரிய வடிவமைப்பான பிரபஞ்ச சக்தியின் ஒரு பகுதியாக இருக்கிறோம். எல்லா நல்ல விஷயங்களும் நமக்கு வரட்டும்! என குறிப்பிட்டுள்ளார்.
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்