![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Manipur violence: "மணிப்பூர் விவகாரத்தை பிரதமர் மோடி கையாண்ட விதம் இருக்கே".. கிழித்து தொங்கிவிட்ட பாஜக எம்எல்ஏ!
மணிப்பூரில் பிரதமர் மோடி கையாண்ட விதத்தை அந்த மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
![Manipur violence: Manipur BJP MLA slams PM Modi over Manipur violence says entirely misplaced his priorities Manipur violence:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/23/63ab1f1c364e4a6c8a1bf7fc274854731690118948120729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மணிப்பூரில் பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் நாட்டு மக்களை உலுக்கி வருகிறது. அங்கு, இனக்கலவரம் இரண்டு மாதங்களுக்கு மேல் நடந்து வந்தாலும் பிரதமர் மோடி, இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். ஆனால், மக்கள் மத்தியில் மணிப்பூர் சம்பவம் தொடர்பான வீடியோ ஏற்படுத்திய தாக்கம், அவரை வாய் திறந்து கண்டிக்க வைத்தது.
79 நாள்களுக்கு வாய் திறக்காமல் இருந்த பிரதமர் மோடி:
கடந்த மே 3ஆம் தேதி தொடங்கிய இனக்கலவரம் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அப்பாவி மக்கள் உயிரோடு எரித்து கொல்லப்படுவதாக தினம் தினம் செய்திகள் வெளியாகின. மாநில அரசை கலைத்துவிட்டு, குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்த போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மணிப்பூர் முழுவதும் இனக்கலவரம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, பற்றி எரிந்து கொண்டிருந்தபோது, அமெரிக்க, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருந்தார். இறுதியாக, பழங்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் வீடியோவாக வெளியான பிறகுதான், சம்பவத்தை கண்டித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
கிழித்து தொங்கவிட்ட பாஜக எம்எல்ஏ:
கிட்டத்தட்ட 79 நாள்களுக்கு பிறகு, அந்த வீடியோ ஏற்படுத்திய கொந்தளிப்பின் காரணமாக மணிப்பூர் குறித்து மோடி முதல்முறையாக பேசியிருந்தார்.
இந்த நிலையில், மணிப்பூரில் பிரதமர் மோடி கையாண்ட விதத்தை அந்த மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ வெளிப்படையாக விமர்சித்துள்ளார். காட்டமாக பேசியுள்ள பாஜக எம்எல்ஏ பவுலியன்லால் ஹாக்கிப், "79 நாட்களைப் பற்றி மறந்துவிடுங்கள், அத்தகைய அளவிலான வன்முறைக்கு, ஒரே வாரத்தில் பிரதமர் மோடி பேசியிருந்தால் கூட, அது தாமதம்தான்.
தவறான விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளார். பயணத்திற்கு முன்னதாக பிரதமரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால், முடியவில்லை. மக்கள் கொல்லப்படும் விஷயத்தைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதே மனிதநேயம். மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் பிரதமருடன் சந்திக்க முயற்சி செய்தோம்.
ஆனால், பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இன்று வரை, நிலைமையின் தீவிரத்தை அவருக்குத் தெரிவிக்கும் வாய்ப்பிற்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
பழங்குடியினர் (ST) அந்தஸ்தை கேட்டு போராடிவரும் மெய்தி சமூகத்திற்கும், அதை எதிர்த்து வரும் குக்கி பழங்குடி சமூகத்திற்கு இடையே நடந்து வரும் இனக்கலவரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மணிப்பூரில் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முன்னேறிய சாதி பிரிவினராக இருப்பவர்கள் மெய்தி சமூகத்தினர்.
அதேபோல, கல்வி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மலைப் பிரதேசத்தில் எந்த வித வசதிகளும் இன்றி வாழ்ந்து வருபவர்கள் பழங்குடியினரான குக்கி சமூகத்தினர். இவர்கள் இருவருக்கும் இடையே நடந்து வரும் இனக்கலவரத்தால் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் குக்கி சமூகத்தை சேர்ந்த பெண்கள்தான்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)