LPG தட்டுப்பாடு: சிலிண்டர் முன்பதிவில் மாற்றம்? உண்மை என்ன? மத்திய அரசின் பரபரப்பு விளக்கம்!
வாடிக்கையாளர்களுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை சிலிண்டர் முன்பதிவு செய்யலாம் என இருந்த இந்த விதிமுறை தற்போது 45 நாட்களாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது என்றும் தகவல்கள் கூறப்படுகிறது.
இந்தியாவில் தொடர்ந்து 4ஆவது வாரமாக LPG தட்டுப்பாடு நீடிக்கிறது. இந்தியா தனக்கு தேவையான LPG-யில் 60 சதவீதத்தை வளைகுடா நாடுகளில் இருந்து தான் கொள்முதல் செய்கிறது. வளைகுடா நாடுகளில் வாங்கப்படக்கூடிய LPG , கப்பல்கள் வழியாக இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது.

போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு LPG கொண்டுவரப்படவில்லை. இது இந்தியாவில் கடுமையான LPG தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது. முதல் கட்டமாக எண்ணெய் நிறுவனங்கள் வணிக சிலிண்டர் வினியோகத்தை முற்றிலுமாக நிறுத்தி வைத்தன, அதேபோல நிறுவனங்கள் , ஆலைகளுக்கு வழங்கி வந்த LPG வினியோகத்தையும் நிறுத்தி வைத்திருக்கின்றன. வீட்டு உபயோக பயன்பாட்டு சிலிண்டர் டெலிவரிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. எனவே தற்போதைக்கு கையிருப்பு இருக்கக்கூடிய LPG மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிடமிருந்து கொண்டு வரப்படக்கூடிய LPG ஆகியவற்றை கொண்டு இண்டேன், ஹெச்பி, பாரத் கேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வீட்டு உபயோக சிலிண்டர் டெலிவரிக்கு தான் முன்னுரிமை கொடுத்து வருகின்றன. இதற்கிடையே வீட்டு உபயோக சிலிண்டர் முன்பதிவு விதிமுறைகளில் அவ்வப்போது மாற்றம் அறிவிக்கப்பட்ட வண்ணம் இருக்கிறது.
மார்ச் 7ஆம் தேதி மத்திய அரசு, சிலிண்டர் முன்பதிவு கால இடைவெளியை 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக நீடித்தது. நகர்ப்புறங்களுக்கு 25 நாட்களும் கிராமப்புறங்களுக்கு 45 நாட்களும் இடைவெளி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நிலைமையை சரி செய்ய சிலிண்டர் முன்பதிவில் மேலும் ஒரு மாற்றம் வந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இரண்டு சிலிண்டர் இணைப்பு கொண்ட வீடுகளில் இதற்கு முன்பு 25 நாட்களுக்கு ஒரு முறை சிலிண்டர் முன்பதிவு செய்யலாம் என்ற விதி இருந்தது அதனை தற்போது 35 நாட்களாக நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது என தகவல் பரவியது. நீங்கள் ஒரு சிலிண்டரை புக் செய்து டெலிவரி பெற்று விட்டீர்கள் அதிலிருந்து 35 நாட்கள் கழித்து தான் உங்களால் புதிதாக மற்றொரு சிலிண்டர் புக் செய்யவே முடியும்.
குறிப்பாக பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை சிலிண்டர் முன்பதிவு செய்யலாம் என இருந்த இந்த விதிமுறை தற்போது 45 நாட்களாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது என்றும் தகவல்கள் கூறப்படுகிறது. அதாவது உஜ்வாலா திட்டத்தில் கேஸ் இணைப்பு பெற்றவர்கள் 45 நாட்களுக்கு ஒரு முறை தான் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியும் என சொல்லப்பட்டது.
LPG தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சீரான முறையில் LPG விநியோகம் செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இப்படி ஒரு நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் சிலிண்டர் முன்பதிவு விதிமுறையில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை என விளக்கம் தந்துள்ளது.
தற்போது நகர்ப்புறங்களில் சிலிண்டர் முன்பதிவுக்கான இடைவெளி காலம் 25 நாட்கள், கிராமங்களுக்கு 45 நாட்கள். அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ள மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகம், பேனிக் புக்கிங் செய்ய வேண்டாம் என மக்களை கேட்டு கொண்டுள்ளது. நாட்டில் போதுமான அளவு LPG கையிருப்பு இருப்பதால் மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளது. ஆனால் பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் 30 நாட்களுக்கு ஒருமுறை தான் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியும் என தங்களுடைய செயலியிலேயே காட்டுவதாக கூறுகின்றனர். இன்னும் பல நகரங்களிலும் முன்பதிவு செய்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் சிலிண்டர் டெலிவரி கிடைக்கவில்லை குடோனில் வந்து எடுத்து செல்லும்படி விநியோகஸ்தர்கள் கூறுவதாக வாடிக்கையாளர் புகார் தெரிவிக்கின்றனர்.























