மெக்கா சென்ற இந்தியர்கள் 42 பேர் பலி.? சவுதியில் நடந்த பெரும் துயரம்- நடந்தது என்ன.?
இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவிற்கு புனித பயணம் சென்ற 42 இந்தியர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புனித பயணம் - சவுதியில் விபத்து
இஸ்லாமியர்களில் புனித பயணங்களில் ஒன்று ஹஜ், இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாடுகளில் இருந்து சவுதியில் உள்ள மெக்கா மற்றும் மதீனாவிற்கு இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொள்வர்கள். அந்த வகையில் இந்தியாவில் தெலங்கானா மாநிலத்தில் இருந்து சென்ற ஒரு குழுவினர் மெக்காவில் தங்களது புனித பயணத்தை முடித்து விட்டு மதீனா நோக்கி பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
அதிகாலையில் நடந்த விபத்து
அப்போது அதிகாலை 1.30 மணியளவில் உம்ரா புனித பயணம் சென்ற பேருந்தும் எதிரே வந்த டீசல் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி வெடித்துள்ளது. இதில் ஏற்பட்ட தீவிபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 42 இந்திய பயணிகள் பலியாகியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 11 ஆண்கள், 20 பெண்கள், 11 குழந்தைகள் என 42 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பாக சவுதி அரேபிய அரசோடு இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு தகவல்களை கேட்டறிந்து வருகிறார்கள்.
தெலங்கானா அரசு நடவடிக்கை
இந்த நிலையில் இந்த விபத்தில் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் தொடர்பான தகவல்களை சேகிரக்க தலைமைச்செயலாளர் மற்றும் டிஜிபிக்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.




















