Indian Stock Index Climb: ட்ரம்ப்பின் பரஸ்பர வரியால் நோ டேமேஜ்... அசத்தும் இந்திய பங்குச் சந்தைகள்...
நீண்ட வார இறுதிக்குப்பின் வர்த்தகத்தை தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள், ட்ரம்ப்பின் பரஸ்பர வரியால் ஏற்பட்ட இழப்புகளிலிருந்து மீண்டு உயர்வுடன் வர்த்தகமாகின.

3 நாட்கள் விடுமுறைக்குப்பின் இன்று இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் தொடங்கியதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரியால் ஏற்பட்ட இழப்புகளை சமாளித்து, பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன.
ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரியால் பாதித்த பங்குச்சந்தைகள்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதித்த நிலையில், நண்பனான இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 26 சதவீத வரியை விதிப்பதாக, இந்த மாதத்தின் தொடக்கத்தில் அறிவித்தார் ட்ரம்ப். இதையடுத்து, பல்வேறு நாடுகளைப் போலவே, இந்திய பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியை சந்தித்தன. எனினும், தற்போது வரி விதிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன.
விடுமுறைக்குப்பின் இன்று உயர்வுடன் தொடங்கிய வர்த்தகம்
இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான NSE நிஃப்டி 50 2.4% அளவிற்கு உயர்வுடன் வர்த்தகமானது. அதன்படி, இன்று காலை சென்செக்ஸ் சுமார் 1,576 புள்ளிகள் உயர்ந்து சுமார் 76,733 புள்ளிகளுடன் வர்த்தகமானது. இதேபோல், நிஃப்டி சுமார் 470 புள்ளிகள் உயர்ந்து 23,298 புள்ளிகளில் வர்த்தகமானது. இது, வரி விதிப்பு அறிவிப்பிற்கு முன்னதாக, அதாவது ஏப்ரல் 2-ம் தேதி இருந்த வர்த்தகத்தக அளவை ஒட்டி இருந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பரஸ்பர வரிகளால் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் இந்திய வர்த்தக சந்தைகளை ஒப்பீட்டளவில் பாதுகாப்பான புகலிடமாக கருதுகின்றனர். இந்தியாவின் பெரிய அளவிலான உள்நாட்டு பொருளாதாரம், உலகளாவிய பொருளாதார மந்தநிலையை சமாளிக்கும் திறனை கொண்டுள்ளது. பெரிய அளவு வரிகளை எதிர்கொள்ளும் அண்டை நாடுகளைவிட இந்தியா இந்த நெருக்கடியை சிறப்பாகவே கையாண்டுள்ளது.
சிறந்த உள்நாட்டு வளர்ச்சி, சீனாவை தவிர பிற பகுதிகளிலும் விரிந்துள்ள விநியோகம் போன்ற தொகுப்புகளால் இந்தியா மிகவும் வலிமைவாய்ந்ததாக இருப்பதால், இந்திய பங்குகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக கருதப்படுவதாக, தி குளோபல் சிஐஓ அலுவலகத்தின் தலைமை செயல் அதிகாரி கேரி துகன் தெரிவித்துள்ளார்.
தீவிரமடைந்துவரும் சீன-அமெரிக்க வர்த்தகப் போரால், சீனாவிற்கு மாற்று உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. அமெரிக்காவிற்கு சீனா எதிர்வரி விதித்து பகையை வளர்த்துவரும் நிலையில், இந்தியா, அமெரிக்காவுடன் சமசரசம் செய்து, ட்ரம்ப் நிர்வாகத்திடமிருந்து தற்காலிக வர்த்தக ஒப்பந்தங்களை பெற முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

