ரயில் பயணிகளுக்கு ஸ்வீட் செய்தி! ஒரே PNR-ல் பயணமா.. இனி இதை மட்டும் போதும்! ரயில்வே கொண்டுவந்த புதிய விதி
பயணிகள் பயணம் செய்யும்போது அந்த குழுவில் உள்ள ஒருவர் மட்டும் செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருந்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் ஒரே PNR (பயணச் சீட்டு) எண்ணின் கீழ் ஒன்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்யும் போது, குழுவில் உள்ள ஒருவர் மட்டும் அசல் அடையாள அட்டையை வைத்திருந்தால் போதுமானது என்கிற புதிய விதியை ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
புதிய அடையாள அட்டை விதிமுறை
புதிய விதியின் கீழ் ஒரே பி.என்.ஆர் (PNR) எண்ணில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்யும்போது அந்த குழுவில் உள்ள ஒருவர் மட்டும் செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருந்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பயணச் சீட்டு பரிசோதகர்கள் ஒவ்வொரு பயணியிடமும் அடையாள அட்டையைக் காட்டும்டி கோர வாய்ப்பு இருந்தது. இது குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் குழுவாகப் பயணம் செய்பவர்களுக்கு தேவையற்ற காலதாமதத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தி வந்தது. பயணத்தை எளிதாக்கவும் ரயில் பயணத்தின் போது மேற்கொள்ளப்படும் சரிபார்ப்பு நடைமுறைகளைச் சீரமைக்கவும் இந்த மாற்றத்தை இரயில்வே அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
ஒரு பயணிக்கு அடையாள அட்டை கட்டாயம்
திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி ஒரே பயணச் சீட்டில் ஆறு பயணிகள் வரை பயணம் செய்யும்போது அவர்களில் குறைந்தது ஒருவராவது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணத்தை வைத்திருக்க வேண்டும். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு (Passport), பான் கார்டு அல்லது இதர அங்கீகரிக்கப்பட்ட அடையாளச் சான்றுகள் இதில் ஏற்றுக்கொள்ளப்படும். இந்தப் புதிய நடைமுறை ஒரே முன்பதிவின் கீழ் டிக்கெட் எடுத்திருக்கும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுக்கொள்ளப்படும் அடையாள அட்டைகள்:
-
ஆதார் கார்டு (Aadhaar Card)
-
வாக்காளர் அடையாள அட்டை (Voter ID)
-
கடவுச்சீட்டு (Passport)
-
பான் கார்டு (PAN card)
-
பிற அரசு அங்கீகரித்த அடையாள அட்டைகள்.
சரிபார்ப்பு நடைமுறை
பயணச் சீட்டு பரிசோதகர்கள், குழுவில் உள்ள ஒருவரது அடையாள அட்டையைச் சரிபார்த்துவிட்டு, மற்ற பயணிகளையும் அங்கீகரிப்பார்கள். இருப்பினும், காட்டப்படும் அடையாள அட்டை உண்மையானதாகவும், செல்லுபடியாகும் ஒன்றாகவும் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
நீண்ட தூரப் பயணம் மேற்கொள்பவர்களுக்கும், குடும்பமாகப் பயணிப்பவர்களுக்கும் இந்த மாற்றம் மிகுந்த வசதியை அளிக்கும் என இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
























