India Corona : இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா…4 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு...அதிர்ச்சி கொடுக்கும் ரிப்போர்ட்...!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது, தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று வரை 3,641-ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 4,435-ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. இதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்த நிலையில், விஞ்ஞான உலகின் தொடர் முயற்சியின் காரணமாக பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இதன் தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது அது மீண்டும் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. அதேபோல, பருவகால காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தினசரி பாதிப்பு அதிகரிப்பு
இந்நிலையில், நாட்டில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பானது புதிய உச்சத்தை அடைகிறது. அதன்படி, நேற்று வரை 3,641 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 4,435ஆக அதிகரித்துள்ளது.
COVID19 | India reports 4,435 new cases in 24 hours; Active caseload at 23,091
— ANI (@ANI) April 5, 2023
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 4,435 பேருக்கு புதியதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது நேற்றைய விட 30 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 4,777 பாதிப்பு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது 5 மாதங்களுக்கு பிறகு இந்த பாதிப்பு வந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2,508 பேர் கடந்த 24 மணி நேரத்தில் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 4.41 கோடி பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதில் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி விகிதம் 3.38 சதவிகிதமாக உள்ளது. பாதிப்புக்குள்ளானர்களின் வார விகிதம் 2.79 சதவிகிதமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4.47 கோடியாக உள்ளது.
இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை:
இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 916ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பிற்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் மகாராஷ்டிரா, கேரளாவில் தலா 4 உயிரிழப்புகளும், டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, புதுச்சேரி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு உயிரிழப்புகளும் பதிவாகி உள்ளன.
இதுவரை, 92.18 கோடி முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 நேரத்தில் 1.64 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை, 220.65 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.