![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Rahul Gandhi: சிக்குவாரா? தப்புவாரா? ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு..!
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் குஜராத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
![Rahul Gandhi: சிக்குவாரா? தப்புவாரா? ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு..! gujarat high court will judgement on rahul gandhi plea seeking stay on his conviction today Rahul Gandhi: சிக்குவாரா? தப்புவாரா? ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/07/8963fe20981af88cd40ad47c8f7e71e71688695577942572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் குஜராத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடகாவில் நடந்த கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி மீது குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ.வான பூர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த மார்ச் 23 ஆம் தேதி ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இதனைத் தொடர்ந்து அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், ஒரு மனு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், மற்றொன்றில் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரியும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த 2 மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம் ராகுல்காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராகுல்காந்தி தன் மீதான தண்டனைக்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார். கடந்த மே மாதம் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. அப்போது தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதி ஹேமந்த் பிரசாக் கோடை விடுமுறைக்குப் பின் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்
இந்த நிலையில் குஜராத் நீதிமன்றம் வெளியிட்ட வழக்கு விசாரணை பட்டியலில், ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கில் இன்று காலை 11 மணிக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதில் சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டால் ராகுல்காந்தி மீண்டும் தனது எம்.பி. பதவியை பெறும் வாய்ப்பு ஏற்படும். ஒருவேளை தீர்ப்பு ராகுல்காந்திக்கு எதிராக அமைந்தால் அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தின் அதிக நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வு முன் மேல்முறையீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)