11 லட்சம் லிட்டர் பாலை ஆற்றில் கொட்டியிருக்கீங்களே.. ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்திருக்கலாமே.! முன்னாள் நீதிபதி ஓஹா
மதச் சடங்கிற்காக ஆற்றில் பல லட்சம் லிட்டர் பால் கரைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எத்தனையோ ஏழைக் குழந்தைகளுக்கு பால் தேவைப்படுகிறது. ஆற்றில் ஊற்றிய 11 லட்சம் லிட்டர் பாலை ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்திருக்கலாமே என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபே ஸ்ரீனிவாஸ் ஓஹா கேள்வி எழுப்பியுள்ளார்.

சுற்றுச்சூழல் பாதிப்பு- உரிமையா.? கடமையா.?
'இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சுற்றுச்சூழல் - உரிமைகளா அல்லது கடமைகளா' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ் அறக்கட்டளை சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபே ஸ்ரீனிவாஸ் ஓஹா, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி அபே ஸ்ரீனிவாஸ் ஓஹா, சுற்றுச்சூழல் அழிக்கப்படும்போது அல்லது சீரழிந்தால், நாம் ஒருபோதும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ முடியாது. அரசியலமைப்பின் இலட்சியங்கள் என்ன என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
கடல் வாழ் உயிரினங்களை அழிந்து வருகிறது
இயற்கை சூழலை மேம்படுத்துவதும் பாதுகாப்பதும், உயிரினங்கள் மீது இரக்கம் காட்டுவது ஒவ்வொருவரின் கடமை என குறிப்பிட்டார். சதுப்புநிலங்களை அழிக்கும்போது கடல்வாழ் உயிரினங்களை அழித்துவிடுகிறோம். நமது நதிகளை மாசுபடுத்தும் போது, அது கடல் வாழ் உயிரினங்களை அழிக்கிறது. நாம் மரங்களை வெட்டும்போது, பறவைகளுக்கு மிகப்பெரிய தீங்கு விளைவிக்கிறோம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் அரசின் கூட்டுக் கடமையாகிறது. அரசு கடமையைச் செய்யத் தவறினால், குடிமக்கள் மாசு இல்லாத சூழலில் வாழ்வதற்கான அல்லது மிகவும் கண்ணியமான மற்றும் வளமான வாழ்க்கை வாழ்வதற்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும்.

மாசடைந்த கங்கை நதி
பிரயாக்ராஜில் கும்பமேளா நடந்தது, அங்குள்ள கங்கை நதியில் கோடிக்கணக்கான மக்கள் குளித்ததாக கூறப்படுகிறது. நதிக்கு நாம் என்ன மாதிரியான மாசுபாட்டை ஏற்படுத்துகிறோம் என்று கற்பனை செய்து பாருங்கள். யாரோ ஒருவர் புனித நதி என்று அழைக்கும் நதியில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் நீராடுகிறார்கள். நீங்களே மாசு ஏற்படுத்தினால் எப்படி புனித நதி என்று அழைக்க முடியும்? என கேள்வி எழுப்பினார். மதச் சடங்கு ஒன்றுக்காக மத்திய பிரதேசத்தில் உள்ள ஆற்றில் பல லட்சம் லிட்டர் பால் கரைக்கப்பட்டதாக படித்தேன், பால் ஆக்ஸிஜனை உறிஞ்சும் ஒரு பொருள் என்பதால், கடல்வாழ் உயிரினங்களை முழுவதுமாக கொன்று குவித்திருக்க வேண்டும்.
அந்த மாசு அளவு மற்றும் ஆற்று நீரின் தரத்தை மேம்படுத்த பல ஆண்டுகள் ஆகும். சமூக நீதி மற்றும் அறிவியல் மனப்பான்மை இல்லாமை குறித்தும் யோசிக்க வேண்டும். இந்தியாவில் எத்தனையோ ஏழைக் குழந்தைகளுக்கு பால் தேவைப்படுகிறது. ஆற்றில் ஊற்றிய 11 லட்சம் லிட்டர் பாலை ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்திருக்க வேண்டும், அவர்களுக்கு பால் முக்கிய தேவையாக உள்ளது.
ஆறுகள் மாசுவால் உயிரிணங்கள் பாதிப்பு
விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி மற்றும் பல பண்டிகைகளில் நீர் மாசு, காற்று மாசு, ஒலி மாசு ஆகியவற்றை உருவாக்குகிறோம். சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகள் தவறாமல் மீறப்படுகின்றன. நமது காதுகளிலும் மூளையிலும் எவ்வளவு அதிக சத்தம் ஏற்படும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது. மூளையை பாதிக்கிறது. சிலைகளை கண்மாய்கள், ஆறுகள், ஏரிகள், கடல் ஆகியவற்றில் மூழ்கடித்து விடுகிறோம். அந்த சிலைகளில் உள்ள கண்கள் பிளாஸ்டர் ஆப் பாரிஸால் ஆனது என்றால், அதுவும் மிகப்பெரிய மாசுபாட்டை உருவாக்குகிறது. இவற்றை நீர்நிலைகளில் கரைப்பதால் என்ன கேடு விளைவிக்கிறது என்பதை நாம் உணர்வதில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.
காற்றின் தரக் குறியீடு அதிகரிக்கும்போது, நகரத்தில் கட்டுமானப் பணிகளை நிறுத்துவது, டீசல் பயன்படுத்தும் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது போன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் பிறப்பித்துள்ளன. இந்த உத்தரவுகள் அனைத்தும் உயரதிகாரிகளின் நலனுக்காக பிறப்பிக்கப்பட்டவை என்று யாராவது கூறினால், அவை முற்றிலும் தவறானவை. இப்போது காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படுவது யார்? தெருக்களிலும் நடைபாதைகளிலும் நடைபாதைகளிலும் வேலை செய்யும் தொழிலாளர்கள், கூலியாட்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் தான்.
மீன், நண்டு, கடல் ஆமைகள் பாதிப்பு
டெல்லியில் உள்ள அனைத்து பொது மருத்துவமனைகளின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால் சாலையோரம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்கும் ஏழை மக்கள் சுவாச நோய்களுக்கான சிகிச்சைக்காக மருத்துவமனைகளை அணுக வேண்டியுள்ளது, பெரிய ஏரிகளை அசுத்தப்படுத்துகிறோம், பெரிய ஏரிகளை ஆக்கிரமித்து, கடற்கரைகளை மாசுபடுத்துகிறோம், சதுப்புநிலங்களை அழிக்கிறோம். சதுப்புநிலங்கள் ஒட்டுமொத்த கடல் வாழ் உயிரினங்களையும், மீன், நண்டு, கடல் ஆமைகள் போன்றவற்றையும் பாதுகாக்கின்றன.
சதுப்புநிலங்களை அழிக்கும்போது, ஆறுகள், கடல்கள் மற்றும் ஏரிகளை மாசுபடுத்தும்போது, மீனவர் சமூகம் பாதிக்கப்படுகிறது. வருமானம் இல்லாமல் தவிக்கிறார்கள். இந்தியாவின் பல பகுதிகளில் நடப்பதை பார்த்திருக்கிறோம். சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்களை மீறுபவர்கள் மீது தைரியமாக விரல்களை சுட்டிக்காட்டும் செயல்பாட்டாளர்களுக்கு மக்கள் ஆதரவு கிடைக்காதது மிகவும் வருந்தத்தக்கது என முன்னாள் நீதிபதி ஓஹா தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















