![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மகளிர் தினத்தில் பிரதமர் மோடியிடம் 5 முக்கிய கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ்!
டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்ததை விட தொழிலாளர் படையில் பெண்களின் சதவீதம் இப்போது 20% குறைவாக உள்ளது என காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
![மகளிர் தினத்தில் பிரதமர் மோடியிடம் 5 முக்கிய கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ்! Congress Puts Forth 5 Questions To PM Modi On Womens Day From Manipur to Unemployment மகளிர் தினத்தில் பிரதமர் மோடியிடம் 5 முக்கிய கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/08/8274387d1b4e4dc737d36c3b12f957481709895144425729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சர்வதேச மகளிர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் எழுப்பிய 5 முக்கிய கேள்விகள்:
இந்த நிலையில், இந்தியாவில் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை முன்வைத்து பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் 5 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது. எக்ஸ் வலைதளத்தில் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இது தொடர்பாக குறிப்பிடுகையில், "இன்று சர்வதேச மகளிர் தினம்.
பெண்களுக்கு மரியாதை செலுத்துவதைத் தவிர்த்து பிரதமர் எதையும் செய்யமாட்டார் என்றே எதிர்பார்க்கிறேன். இருப்பினும், நாடு முழுவதும் உள்ள பெண்கள் அவரிடம் கேட்கும் சில முக்கிய கேள்விகள் இங்கே குறிப்பிடுகிறேன்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களில் பெண்களே அதிகம். மாநிலத்திலும் மத்தியிலும் பாஜகவின் இரட்டை அநியாய அரசாங்கம் இருக்கும் நிலையில், பெண்கள் தாக்கப்பட்டு நிர்வாணமாக அணிவகுத்துச் செல்லப்படும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. மாநிலத்திற்குச் சென்று பார்க்கக் கூட பிரதமர் அக்கறை காட்டாதது ஏன்?
மணிப்பூர் முதல் வேலையில்லா திண்டாட்டம் வரை:
பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக பெண் மல்யுத்த வீரர்கள் சுமத்திய கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மௌனம் சாதித்து வருகிறார். இந்த விவகாரத்தில் பிரதமரின் நிலைப்பாடு என்ன? பிரிஜ் பூஷன் சரண் சிங்கை ‘மோடியின் குடும்ப’ உறுப்பினராக மோடி கருதுகிறாரா?
உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வேகமாக உயர்ந்து வருகின்றன. இந்த விலைவாசி உயர்வின் பாதிப்பில் இருந்து குடும்பங்களைக் காப்பாற்றும் திட்டம் பிரதமரிடம் உள்ளதா?
அநியாய ஆட்சியின் அடையாளங்களில் ஒன்று வேலையில்லா திண்டாட்டம் ஆகும். குறிப்பாக, வேலை தேடும் பெண்கள், வேலை தேடுவதில் இருந்து ஊக்கம் இழந்து, ஒட்டுமொத்தமாக பணியில் இருந்து வெளியேறிவிட்டனர். டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்ததை விட தொழிலாளர் படையில் பெண்களின் சதவீதம் இப்போது 20% குறைவாக உள்ளது. இது பொருளாதாரத்தை சீர்குலைக்கும். பெண்களை மீண்டும் பொருளாதார நீரோட்டத்திற்கு கொண்டு வர பிரதமரிடம் தீர்வு இருக்கிறதா?
2014 இல் பிரதமர் பதவிக்கு வந்த உடனேயே "பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ" யோஜனாவை பெரும் ஆரவாரத்துடன் தொடங்கினார். இத்திட்டத்தின் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 80% விளம்பரங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பெண் சிசுக் கொலையை நிறுத்தவும், பெண் கல்வியை மேம்படுத்தவும் பிரதமருக்கு இன்னும் அர்த்தமுள்ள பார்வை இருக்கிறதா? அல்லது விளம்பரத்தில் தனது முகத்தை காட்ட, தனக்கு தானே முத்திரை குத்திக்கொள்வதற்கு அவருக்கு வேறு வழியைக் கொடுப்பதற்கான மற்றொரு வாய்ப்பா?
பாஜகவை அகற்றுங்கள், எங்கள் மகளை காப்பாற்றுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)