கர்நாடகாவில் பேருந்து ஊழியர்கள் போராட்டம்: பெங்களூரு-தமிழ்நாடு இடையே போக்குவரத்து முடங்குமா? பயணிகள் அதிர்ச்சி!
அரசு பேருந்து ஊழியர்களின் பொறுமையை சோதிக்கும் கர்நாடகா அரசின் செயல்பாட்டால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.
கர்நாடகா அரசு மாநில பேருந்து நிறுவனம் கேஎஸ்ஆர்டிசி (KSRTC) ஊழியர்கள், சம்பள பாக்கி மற்றும் சம்பள உயர்வு கோரி பெங்களூரில் பெரும் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். வியாழக்கிழமை நாளை பிப்ரவரி 19ம் தேதி நடைபெறவுள்ள போராட்டத்தில் 1.15 லட்சத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். பெங்களூரின் பிரபலமான ஃப்ரீடம் பார்க்கில் நடைபெறும் இந்தப் போராட்டம், அரசு மீது அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
அரசு பேருந்து ஊழியர்களின் பொறுமையை சோதிக்கும் கர்நாடகா அரசின் செயல்பாட்டால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன. வியாழக்கிழமை இந்த வேலைநிறுத்த போராட்டம் நடக்கும் காரணத்தால் வார இறுதி நாட்களில் பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது. KSRTC மற்றும் பிற போக்குவரத்து கார்ப்பரேஷன் ஊழியர்கள், ஜனவரி 1, 2020 முதல் பிப்ரவரி 28, 2023 வரையிலான 38 மாதங்களுக்கான ரூ.1,785 கோடி சம்பள பாக்கியை கர்நாடகா அரசிடம் இருக்கு கோரி வருகின்றனர். இதோடு, ஜனவரி 1, 2024 முதல் 25% சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
இந்த கோரிக்கைகள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளன. தொழிற்சங்கங்களின் கூட்டு செயல் குழு இதற்காக ஆறு தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்து போராட்டத்தை திட்டமிட்டுள்ளது.கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து, ஏப்ரல் 1, 2026 முதல் சம்பள உயர்வு வழங்குவதாகவும், ஜனவரி 1, 2022 முதல் பிப்ரவரி 28, 2023 வரையிலான 14 மாதங்களுக்கான ரூ.718 கோடி பாக்கியை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால் முழு நிலுவை தொகையை தீர்க்காது என்பதால் அரசின் பரிந்துரையை ஊழியர்கள் நிராகரித்தனர். டிசம்பரில் போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார், ஆனால் அரசு பரிந்துரையில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. இதனால் இதிலும் தீர்வு காணப்படவில்லை. அரசு பேருந்து ஊழியர்கள் ஆகஸ்ட் 2025ல் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர், இது கர்நாடகா முழுவதும் பேருந்து சேவைகளை பாதித்தது. உயர் நீதிமன்ற உத்தரவால் அது கைவிடப்பட்டது.
இதை தொடர்ந்து ஜனவரி 29இல் திட்டமிடப்பட்ட 'பெங்களூரு சலோ' போராட்டம், தொழிற்சங்க தலைவர் எச்.வி.ஆனந்த் சுப்ரமண்யம் மறைவால் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது பிப்ரவரி 19இல் மீண்டும் நடத்தப்படுகிறது. அரசு இறுதி முடிவெடுக்க தாமதம் செய்வதால் ஊழியர்களின் பொறுமையை இழந்துள்ளனர்.போராட்டம் தீவிரமடைந்தால், பெங்களூரு மற்றும் கர்நாடகா முழுவதும் பேருந்து சேவைகள் பாதிக்கப்படும். பயணிகள் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். மேலும் இந்த போராட்டம் தீவிரமடைந்தால், பெங்களூரு-தமிழ்நாடு இடையேயான பேருந்து சேவைகள் பாதிக்கப்படலாம். இது தமிழ்நாட்டு மக்களின் அன்றாட பயணங்களையும், வணிகத்தையும் பாதிக்கும்.























