கேரளாவில் இருந்து வரும் கோழி, முட்டைக்கு தடை! பாதுகாப்பை உறுதி செய்ய தீவிர நடவடிக்கை!
பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் அங்கிருந்து நீலகிரிக்கு கொண்டு வரப்படும் கோழிகள் மற்றும் அதை சார்ந்த பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், அங்கிருந்து நீலகிரிக்கு கொண்டு வரப்படும் கோழிகள் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களுக்கு நீலகிரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மாவட்ட எல்லைப்பகுதியில் 7 சோதனைச்சாவடிகள் அமைத்து கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில் ஆலப்புழை, கோட்டயம் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்த்து வந்த கோழிகள், வாத்துகள் அடிக்கடி உயிரிழந்தது. இதை தொடர்ந்து இதன் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட மாதிரி சோதனையில் எச்-1, என்-1 பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து உடனடி நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை உத்தரவிட்டது. பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கோழி, காடை இறைச்சி, முட்டை ஆகியவை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கேரள மாநிலத்தில் அடிக்கடி பரவும் பறவைக் காய்ச்சல் நோயை கருத்தில் கொண்டு, நாமக்கல் மண்டலத்தில், உயிரியல் பாதுகாப்பு (பயோ செக்யூரிட்டி) முறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது. பறவைக் காய்ச்சல் அபாயத்தைக் குறைக்க கால்நடை மருத்துவக் கல்லூரி ஆய்வகங்கள் மூலம் தொடர்ச்சியான நோய் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் அங்கிருந்து நீலகிரிக்கு கொண்டு வரப்படும் கோழிகள் மற்றும் அதை சார்ந்த பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நீலகிரி மாவட்ட எல்லைப் பகுதியில் 7 சோதனை சாவடிகள் அமைத்து கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் கண்காணிப்பு நடப்பதாகவும் மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கேரள மாநில எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குனர் டாக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், கால்நடைத் துறையினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் சர்பில் கூறுகையில் பறவை காய்ச்சல் காரணமாக கேரளாவில் இருந்து கோழிகள், முட்டைகள், கோழியின் எச்சம் மற்றும் கோழி தீவனங்கள் வாகனங்களில் நீலகிரிக்கு கொண்டு வர தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது. கேரள எல்லையோரம் உள்ள 7 சோதனை சாவடிகள், கர்நாடகா மாநில எல்லையோரம் உள்ள ஒரு சோதனை சாவடி ஆகிய 8 இடங்களில் தலா ஒரு கால்நடை உதவி மருத்துவர் தலைமையில், ஒரு கால்நடை ஆய்வாளர், ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர் கொண்ட குழு காவல்துறை, வனத்துறை, வருவாய் துறையுடன் இணைந்து பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பறவை காய்ச்சல் நோய் கோழி, வாத்து, வான்கோழி மற்றும் வனப்பறவைகளை தாக்கும். மனிதரையும் தாக்கக்கூடியது. நோய் தாக்கிய வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் வனப்பறவைகள் மூலம் இந்த நோய் நீலகிரி மாவட்டத்திலும் பரவ வாய்ப்பு உள்ளது. பறவைக் காய்ச்சல் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் தவறாது கடைபிடிக்க வேண்டும். வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
கோழி, வாத்து, வான்கோழி உள்ளிட்ட பல்வேறு பறவைகளை ஒரே பண்ணையில் வைத்து வளர்க்கக்கூடாது. வெளியாட்கள், வெளி வாகனங்கள், விலங்குகள் பண்ணைக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. இதர பண்ணை உபகரணங்களை பகிர்ந்து கொள்ளக்கூடாது. பண்ணை உபகரணங்களை மாதம் இருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கோழி பண்ணையில் அசாதாரண இறப்புகள் இருந்தால், உடனடியாக அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுருத்தப்படுகிறது.





















