அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் வழங்குவதாக கூறி பக்தர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரபிரதேம் அயோத்தியில் கடந்தாண்டு ராமர் கோயில் கட்டப்பட்டது. பல ஆண்டுகள் போராட்டம், பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு கட்டப்பட்ட இந்த கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராமர் கோயிலின் பிரசாதத்தை வீட்டிற்கே தருவதாக கூறி இணையவழியில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்தது அம்பலத்திற்கு வந்துள்ளது. காசியாபாத்தைச் சேர்ந்தவர் ஆஷிஷ் சிங். இவர் காதி ஆர்கானிக்.காம் என்ற இணையதளம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
ராமர் கோயில் பிரசாதம்:
ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவிற்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த இணையதளம் வாயிலாக ராமர் கோயிலின் பிரசாதம் வீட்டிற்கே அனுப்பப்படும் என்று விளம்பரப்படுத்தியுள்ளார். இதன்மூலம் அவரிடம் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களுக்கும் பிரசாதம் வேண்டுமென விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களுக்கு பிரசாதம் வழங்குவதுடன், சிறப்பு பிரார்த்திக்கப்பட்ட நாணயங்கள், ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்த சிலைகள் தருவதாகவும் விளம்பரப்படுத்தி அதற்கு கட்டணமும் வசூலித்து வந்துள்ளார். பக்தர்களிடம் இருந்து ரூபாய் 10.49 கோடி வரை வசூலித்துள்ளார். அதில் ராமர் கோயிலின் பிரசாதம் வழங்குவதாக கூறி ரூபாய் 3.85 கோடி ரூபாய் வரை கட்டணமாக வசூலித்துள்ளார்.
இத்தனை கோடி மோசடியா?
ராமர் கோயிலின் அதிகாரப்பூர்வ அறக்கட்டளைக்கும் அவரது இணையளத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லாத நிலையில், இந்த இணையதளம் குறித்து ராமர் கோயில் அறக்கட்டளைக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசில் ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையினர் புகார் அளித்தனர்.
இதையடுத்து, இந்த இணையதளத்தை கண்காணித்த போலீசார் அதிகாரப்பூர்வமற்ற முறையில் செயல்பட்டது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில் இவரது இணையதளம் வாயிலாக ரூபாய் 10.49 கோடி வரை பணப்பரிவர்த்தனை நடைபெற்றது தெரியவந்தது. அதில் பிரசாத விற்பனைக்கு மட்டும் ரூபாய் 3.85 கோடி ரூபாய் வரை அவர் வசூலித்துள்ளார்.
பக்தர்களிடம் பணம் ஒப்படைப்பு:
இதையடுத்து, அமெரிக்காவில் இருந்து திரும்பி ஆஷிஷ் சிங்கை போலீசார் கைது செய்தனர். அவர் மீது மோசடி, நேர்மையற்ற முறையில் பொருட்களை விநியோகம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஆஷிஷ் சிங்கிடம் இருந்து 2.15 கோடி ரூபாயை பறிமுதல் செய்து அயோத்யா போலீசாரிடம் 3 லட்சத்து 72 ஆயிரத்து 520 பக்தர்களுக்கு பணத்தை திருப்பி அளித்தனர்.
சமீபகாலமாக இந்தியாவில் பல விதமான இணையவழி மோசடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக, மக்கள் அதிகளவு செல்லும் இடங்கள், மக்கள் அதிகளவு பயன்படுத்தும் பொருட்கள் விற்பனை, டிக்கெட் விற்பனை உள்ளிட்டவை மூலமாக பலரும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.





















