Arvind Kejriwal: ஆட்டம் கண்ட டெல்லி.. ஜெயிலுக்கு போன முதல்வர்.. மதுபான கொள்கை வழக்கு கடந்து வந்த பாதை!
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மூத்த ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியா மற்றும் 21 பேரை டெல்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மூத்த ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியா மற்றும் 21 பேரை டெல்லி நீதிமன்றம் விடுவித்தது. இந்த வழக்கை விசாரித்த ரோஸ் அவென்யூ நீதிமன்றம் வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்றும், அரவிந்த் கெஜ்ரிவால் இதில் சிக்க வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் தீர்ப்பை கேட்டு நீதிமன்ற வளாகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கதறி அழுதார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியை முடிவுக்கு கொண்டு வர மோடியும் அமித்ஷாவும் சதித் திட்டம் தீட்டினர். இந்த வழக்கில் நாங்கள் நேர்மையானவர்கள் என நீதிமன்றம் கூறியுள்ளது என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மதுபான கொள்கை வழக்கு கடந்து வந்த பாதை
வருவாயை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டும், சில்லறை விற்பனையை தனியார்மயமாக்குதல் இலக்காக கொண்டு டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு புதிய மதுபான கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் டெல்லி 32 ண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் 2022ம் ஆண்டு அந்த திட்டத்தை டெல்லி மாநில அரசு திரும்ப பெற்றது. இந்த நிலையில் இந்த திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம் சாட்டினார். தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கும் ஆளுநர் உத்தரவிட்டார். இதனையடுத்து அப்போதைய துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது முதற்கட்டமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்றது.
தொடர்ந்து அனைவரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இதனடிப்படையில் புதிய மதுபான கொள்கையில் பண மோசடி நடந்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. தொடர்ந்து 2023ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மார்ச் 21ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய,ஆட்சியை தக்க வைக்க அதிஷி மர்லினா முதலமைச்சராக பதவியேற்றார்.
தொடர்ந்து 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ச்சியாக அந்த வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்றது. தற்போது இந்த வழக்கில் அனைவரும் விடுதலை செய்யபட்டனர்.























