![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
AIADMK General Committee Case: அதிமுக பொதுக்குழு வழக்கு யாருக்கு சாதகம்..? உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை..!
இன்றைய விசாரணையின்போது, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்கள் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
![AIADMK General Committee Case: அதிமுக பொதுக்குழு வழக்கு யாருக்கு சாதகம்..? உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை..! AIADMK General Committee Case related to Rehearing in Supreme Court today AIADMK General Committee Case: அதிமுக பொதுக்குழு வழக்கு யாருக்கு சாதகம்..? உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/10/58e99b0f86cc01077b3f216409d2ee731673315503091571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே இரட்டை தலைமை தொடர்பாக கடந்த சில மாதங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது.
அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று ஒருபக்கம் ஓபிஎஸ் தரப்பும், மறுபக்கம் ஈபிஎஸ் தரப்பினரும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து கடந்த ஆண்டும் ஜுலை மாதம் 11ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் பங்கேற்கவில்லை. இந்தநிலையில், கூட்டத்தின் முடிவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஓபிஎஸ் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார்.
இதனால் ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ் இந்த பொதுக்குழு கூட்டத்தின் முடிவுகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபதி செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவானது கடந்த 4ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணையை இந்த வாரமே முடிக்க நாங்க விரும்புகிறோம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்த மனுக்களை நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆயியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. தொடர்ந்து, இந்த வழக்கு பல கட்ட விசாரணைக்கு பிறகு ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அடுத்தடுத்து மூன்று நாட்களாக நடந்த விசாரணைக்கு பிறகு (இன்று) 10ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தநிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையின்போது, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்கள் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நாள் விசாரணை:
கடந்த 4ம் தேதி விசாரணை தொடங்கியபோது, ஓபிஎஸ், ஈபிஎஸ் என்றால் என்ன அர்த்தம் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பொதுக்குழுவுக்கு எதிராக மனு தாக்கல் எனில், அதன் தீர்மானங்களும் வழக்கின் கீழ் வரும் என தெரிவித்தனர்.
அவைத்தலைவர் அதிகாரம் என்ன?
இரண்டாவது நாள் விசாரணையின் போது ஓபிஎஸ் தரப்பு தனது வாதங்களை முன்வைத்தது. அதில், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர முயல்வது, அதிமுக சட்டவிதிகளுக்கு முரணானது என வலியுறுத்தப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அதிமுகவில் அவைத்தலைவர் பதவிக்கான பொறுப்புகள் என்னவென நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பொதுக்குழு, செயற்குழு உள்ளிட்ட கூட்டங்களை கூட்டுவதற்கான அதிகாரம் படைத்தவர் அவைத்தலைவர் என ஓபிஎஸ் தரப்பு விளக்கமளித்தது. குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவர முயல்வது சட்டவிதிகளுக்கு முரணானது எனவும் தெரிவிக்கப்பட்டது.
குறுக்கு வழியை பயன்படுத்திய ஈபிஎஸ்:
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பது 5 ஆண்டு பதவிக்காலம் கொண்டது. 5 ஆண்டுகளுக்கு கட்சியின் முடிவுகளை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்து தான் எடுக்க வேண்டும் என்பது விதி. நிர்வாகிகள் நியமனம் போன்றவற்றில் இருவரும் இணைந்து முடிவெடுத்தால் மட்டுமே அவை செல்லும். பொதுச்செயலாளர் பதவியை குறுக்கு வழியில் எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளார். பொதுக்குழுவில் தமிழ் மகன் உசேன் அவைத்தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டது உட்பட 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன. அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்செயலாளர் பதவி. ஜெயலலிதாவே நிரந்தர பொதுச்செயலாளர் என மாற்றம் கொண்டு வந்த பின், ஈபிஎஸ் குழப்பத்தை உருவாக்குகிறார். ஜெயலலிதா அதிமுகவின் தாய் போன்றவர். அவர் இடத்திற்கு யாரும் வரக்கூடாது என்பதே கட்சியின் நிலைப்பாடு. இந்நிலையில், பொதுக்குழுவை கூட்டி அதில் முடிவுகளை எடுத்தது முழுக்க முழுக்க சட்டவிரோதம் என, ஓபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)